இறுதி கட்டத்தில் நிலவில் மோதி நொறுங்கியது விண்கலம் - அதிர்ச்சியில் நாடு!
லூனா-25 விண்கலம் நிலவில் மோதி விழுந்துள்ளதாக ரஷ்ய விண்வெளி மையம் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.
மூன் மிஷன்
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய கடந்த ஜூலை 14ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. தற்போது சந்திரயான் 3 மிஷன் நிலவை வெற்றிகரமாக நெருங்கியுள்ளது. தற்போது ஆர்பிட்டரில் இருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்துள்ளது. படிப்படியாக நிலவுக்கும் விக்ரம் லேண்டருக்கும் இடையேயான தூரம் குறைக்கப்பட்டு வருகிறது.
நேற்று நள்ளிரவில் சந்திரயான் 3 விண்கலத்தில் இறுதி வேகக்குறைப்பு செயல்பாடு நடைபெற்றது. இதேபோல நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய லூனா-25 என்ற விண்கலத்தை கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி ரஷ்யா விண்ணில் ஏவியது. சக்தி வாய்ந்த ராக்கெட் மூலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை வெறும் ஒரே வாரத்தில் லூனா-25 சென்றடைந்தது. கடந்த 17ம் தேதி நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் ரஷ்ய விண்கலம் வெற்றிகரமாக நுழைந்தது.
தொடர்ந்து படிப்படியாக சுற்றுப்பாதையை குறைக்கும் பணிகள் நடந்து வந்தன. வரும் 23ம் தேதி இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறக்கப்படும் என்று இஸ்ரோ தெரிவித்திருந்த நிலையில் ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் வரும் 21ம் தேதியே நிலவில் தரையிறங்கும் என்று ரஷ்ய விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.
நிலவில் மோதியது
இந்நிலையில் திடீரென விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இறுதிக்கட்ட சுற்றுவட்டப்பாதையை குறைப்பதில் லூனா-25 விண்கலத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ரஷ்ய விண்வெளி நிறுவனம் கூறியது.
நேற்றைய தினம் லூனா 25-ன் சுற்றுவட்டப்பாதையை குறைக்கும் போது தொடர்பு துண்டிக்கப்பட்டது என்றும் இதனையடுத்து விண்கலமானது நிலவில் மோதியுள்ளது என்றும் ரஷ்ய விண்வெளி நிறுவனம் அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளது.