இலங்கைக்கு எதிரான ஐ.நா தீர்மானம் வெற்றி: வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா.!
இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்துள்ளது. ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக பிரிட்டன் தீர்மானம் கொண்டு வந்திருந்தது. அந்த தீர்மானத்தின் மீது கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக விவாதங்கள் நடைபெற்றது.
இன்று அந்த தீர்மானத்தின் மீது இறுதி வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் 47 உறுப்பு நாடுகளும் இணைய வழியாக பங்கெடுத்தன. இந்த தீர்மானத்தின் உறுப்பு நாடுகள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தன.
இந்தியாவின் தூதர் பேசுகையில், “இலங்கையில் தமிழ் மக்களுக்கு உரிய நீதியும், 13 சட்டத்திருத்ததின்படி அரசியல் அதிகாரப் பகிர்வும் மாகாண சபைக்கான தேர்தல்களும் நடத்தப்படும்” என நம்புவதாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற வாக்கெடுப்பை இந்தியா உள்ளிட்ட 14 உறுப்பு நாடுகள் புறக்கணித்தன. பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட 22 நாடுகள் ஆதரவாகவும் சீனா, பாகிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட 11 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. இந்நிலையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் பெரும்பான்மையுடன் நிறைவேறியுள்ளது.
இந்திய அரசு இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும் என இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்திருந்தது சர்ச்சைக்குள்ளாகியிருந்தது.
தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகள் இந்தியா இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தன. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூட இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என கூறியிருந்தார். ஆனால் இந்தியா எதிர்பார்த்தைப் போல வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளது.
ஐ.நாவில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட அனைத்து தீர்மானங்களின் மீதான வாக்கெடுப்பையும் இன்று வரை இந்தியா புறக்கணித்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.