உக்ரைன் ரயில் நிலையத்தில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் - அப்பாவி பொதுமக்கள் பலி
உக்ரைன் நாட்டின் ரயில் நிலையத்தில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பதற்றத்தை அதிகப்படுத்தியுள்ளது.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தாக்குதல் நடத்தி வருகிறது. இருபக்கமும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் போரை முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
மறுபுறம் அமைதிப் பேச்சுவார்த்தையும் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும் சுமூகமான உடன்பாடு எட்டப்படவில்லை. இதற்கிடையில் கடந்த வாரம் துருக்கியில் இரு தரப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றதில் நேட்டோ அமைப்பில் சேரும் முடிவைக் கைவிட்டு நடுநிலையான நிலைப்பாட்டை எடுக்க உக்ரைன் சம்மதம் தெரிவித்ததால் ரஷ்யா தலைநகர் கீவ் சுற்றிய நகரங்களில் இருந்து தனது ராணுவத்தைக் குறைக்க ஒப்புக் கொண்டது.
இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் கிழக்கு உக்ரைனின் கிராமடோர்ஸ் நகரில் உள்ள ரயில் நிலையம் ஒன்றைக் குறி வைத்து ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுளது. மொத்தம் இரண்டு ஏவுகணைகள் இந்த ரயில் நிலையத்தைத் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஏவுகணை தாக்குதலில் 30க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ரஷ்யாவின் தாக்குதலில் இருந்து உக்ரைன் மக்களைப் பாதுகாத்து வெளியேற்ற உக்ரைன் அரசு இந்த ரயில் நிலையத்தைத் தான் பயன்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.