ஐரோப்பாவே ஆபத்தில் உள்ளது, செர்னோபில் அணு உலையில் மின் கட்டமைப்புகள் சேதம் - உக்ரைன் பரபரப்பு தகவல்
செர்னோபில் அணு உலையின் மின் கட்டமைப்புகள் சேதமாகியிருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது உலக நாடுகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் தற்போது 14-வது நாளாக தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில் உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்து 2-வது நாளே ரஷ்ய படைகள்,
உக்ரைன் தலைநகர் கீவ்-இல் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலையில் அமைந்துள்ள செர்னோபில் அணு ஆலையை கைப்பற்ற முயற்சித்தது.
ரஷ்யாவின் இந்த நடவடிக்கை ஒட்டுமொத்த ஐரோப்பாவிற்கும் எதிரான போர்ப் பிரகடனம் என்று அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
ஆனால் ரஷ்ய ராணுவ அமைச்சகமோ செர்னோபில் அணு உலை மீது பயங்கரவாத அமைப்புகளும், தேசியவாத குழுக்களும் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதால்
அணு உலையை பாதுகாக்க நாங்கள் கைப்பற்றி உள்ளோம் என தெரிவித்திருந்தது.
மேலும், செயலிழந்து கிடந்த செர்னோபில் அணுமின் நிலையத்திலிருந்து வெளியேறும் கதிர்வீச்சின் அளவு அதிகரித்து வருவதாக உக்ரைன் அணுசக்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
செர்னோபில் அணுமின் நிலையம் அமைந்துள்ள பகுதியில் இருந்து காமா கதிர்வீச்சு அதிகரித்து வருவது கண்டறியப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியிருந்த்தது.
இதற்கு ரஷ்ய ராணுவம் செர்னோபில் பகுதியில் தரையிறங்கியதாலும், ராணுவ தளவாடங்களை கொண்டு சென்றதாலும் ஏற்பட்ட நில அதிர்வு தான் காரணம் எனவும்
இதனால் அங்குள்ள காற்றில் கதிர்வீச்சு அளவு அதிகரித்திருக்கக் கூடும் எனவும் கூறப்பட்டது.
ஆனால் இந்த குற்றச்சாட்டை அப்போதே ரஷ்யா திட்டவட்டமாக மறுத்தது.
இந்நிலையில், தற்போது செர்னோபில் அணு உலையின் மின் கட்டமைப்புகள் சேதமாகியிருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
ரஷ்ய ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள செர்னோபில் அணு உலைக்கு மின்வசதி தரும் கட்டமைப்புகள் சேதமாகியுள்ளது.
அணு எரிபொருள் சேமிப்பு வசதியின் குளிரூட்டும் அமைப்புகள் மின்வசதியின்றி இருந்தால் கதிர்வீச்சு அதிகரிக்கக்கூடும் என்பதால் ஐரோப்பாவே ஆபத்தில் இருப்பதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் இந்த நடவடிக்கைகள் ஐரோப்பாவையே ஆபத்தில் ஆழ்த்தியுள்ளதாக குற்றம் சாட்டும் உக்ரைனின் வெளியுறவு துறை அமைச்சர்,
மின்விநியோகத்தை மீட்டெடுக்க அனுமதிக்குமாறு உலக நாடுகள் ரஷ்யாவிடம் வலியுறுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.