உருகுலைந்து போகும் உக்ரைன் - 4 திசைகளிலிருந்து ரஷ்ய ஏவுகணை தாக்குதல் - பற்றி எரியும் தலைநகர் - மக்கள் அலறி ஓட்டம்
உக்ரைன் நாடு மீது ரஷ்ய ராணுவம் 4-வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உக்ரைன் நாட்டில் அமைதி சீர்குலைந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து நடத்தப்படும் குண்டு வெடிப்பு சம்பவங்களால் மக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டு, பொதுமக்கள் இங்கும், அங்கும் ஓடும் காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த குண்டு வெடிப்பில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். எங்கு பார்த்தாலும் ரத்தக்கறைகளும், கட்டிடங்களுன் இடிபாடுகளும்தான் கிவியில் காணப்படுகிறது.
உக்ரைனிலிருந்து மக்கள் வெளியேறி ருமேனியா, அங்கேரி, போலந்து ஆகிய நாடுகளின் எல்லைகளுக்கு சென்றுக் கொண்டிருக்கிறார்கள். சண்டை மேலும் வலுத்து வருவதால் இன்னம் 40 லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறக் கூடும் என்று ஐ.நா. தெரிவித்திருக்கிறது.
தலைநகர் கீவ்வுக்குள் புகுந்துள்ள ரஷ்ய ராணுவ வீரர்கள், உக்ரைன் வீரர்கள் தெருக்களில் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், அங்குள்ள குடியிருப்புகள் மீதும் ஏவுகணைகள் வீசப்பட்டுள்ளன. இதனால், பெரும் பதற்றம் அப்பகுதியில் நிலவி வருகிறது.
இந்நிலையில், நேற்று நள்ளிரவில் தலை நகர் கீவ்வில் பல இடங்களில் குண்டுகள் வெடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. உக்ரைன் நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்து தாக்குதல் நடத்துங்கள் என்று ரஷிய ராணுவத்தினருக்கு அதிபர் புதின் திடீரென்று நள்ளிரவு உத்தரவிட்டிருக்கிறார்.
ரஷ்யா விடுத்த பேச்சுவார்த்தை அழைப்பை உக்ரைன் நிராகரித்ததால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைனின் அனைத்து நகரங்களுக்குள்ளும் நுழையும் வகையில் எல்லா திசைகளிலிருந்து ராணுவத்தை விரிவுபடுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ரஷ்ய ராணுவம் தரப்பில் கூறியிருப்பதாவது -
நாங்கள் உக்ரைனுடன் பேச்சு வார்த்தை நடத்த அழைப்பு விடுத்திருந்தோம். உயர்மட்ட கமிட்டிகளை அனுப்ப தயாராக இருந்தோம். ஆனால், உக்ரைன் எங்கள் அழைப்பை நிராகரித்துவிட்டது. இனி.. நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தப்போறது இல்லை. உக்ரைனின் அனைத்து பக்கங்களிலிருந்து தாக்குதல் நடத்தப்போகிறோம்.
இவ்வாறு தெரிவித்துள்ளது.
உத்தரவு கிடைத்ததால், நள்ளிரவு ரஷ்ய ராணுவத்தின் தாக்குதல் பல மடங்கு அதிகரித்துள்ளது. 4 திசைகளிலிருந்து ஏவுகணைகள் வீசப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலில் கீவ் நகரின் வாசில்கீவ் பகுதியில் உள்ள எண்ணை கிடங்கு வெடித்து சிதறியுள்ளது. அந்த எண்ணை கிடங்கிலிருந்து தீப்பிழம்பு பல அடி உயரத்திற்கு எழும்பியது.
அதேபோல், கார்கீவில் உள்ள எரிவாயு குழாய் மீது இன்று அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் எரிவாயு குழாய் வெடித்து சிதறியதில் கடும் சேதம் ஏற்பட்டு இருக்கிறது.
இது தொடர்பாக உக்ரைன் அதிபர் அலுவலகம் கூறியிருப்பதாவது -
ரஷ்ய படைகள் 2 எரிவாயு குழாயை வெடிக்க செய்துள்ளனர். இதனால், கடுமையான புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது. இது ஒரு சுற்றுச்சூழல் பேரழிவை ஏற்படுத்தக் கூடும். இதனால் மக்கள் தங்கள் வீட்டு ஜன்னல்களை ஈரமான துணியால் மூடிவையுங்கள்.
இவ்வாறு கூறியுள்ளது.
ரஷ்ய ராணுவம் உக்ரைனின் எரிவாயு மற்றும் எண்ணெண் கிடங்குகளை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தலைநகர் கீவ்வில் உள்ள முக்கிய நகரங்கள் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
இன்று முதல் உக்ரைனில் நடக்கும் போர் உச்சக் கட்டத்திற்கு செல்லும் என்ற பீதி நிலவி வருகிறது.