‘என் செல்ல நாய்க்குட்டியை விட்டு நான் வெளியேற மாட்டேன்...’ - உக்ரைனில் இந்திய மாணவர் கண்ணீர் - நெஞ்சம் கனத்த சம்பவம்
உக்ரைன் நாடு மீது ரஷ்ய ராணுவம் 4-வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால் உக்ரைன் நாட்டில் அமைதி சீர்குலைந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து நடத்தப்படும் குண்டு வெடிப்பு சம்பவங்களால் மக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டு, பொதுமக்கள் இங்கும், அங்கும் ஓடும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
எங்கு பார்த்தாலும் ரத்தக்கறைகளும், கட்டிடங்களுன் இடிபாடுகளும்தான் கிவியில் காணப்படுகிறது. உக்ரைனிலிருந்து மக்கள் வெளியேறி ருமேனியா, அங்கேரி, போலந்து ஆகிய நாடுகளின் எல்லைகளுக்கு சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.
தலைநகர் கீவ்வுக்குள் புகுந்துள்ள ரஷ்ய ராணுவ வீரர்கள், உக்ரைன் வீரர்கள் தெருக்களில் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், அங்குள்ள குடியிருப்புகள் மீதும் ஏவுகணைகள் வீசப்பட்டுள்ளன. இதனால், பெரும் பதற்றம் அப்பகுதியில் நிலவி வருகிறது.
மாணவர்கள் பலர் உக்ரைன் நாட்டை விட்டு வெளியேறி அவரவர் நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.
கிழக்கு உக்ரைனில் உள்ள கார்கீவ் தேசிய பல்கலைக் கழகத்தில் சாப்ட்வேர் என்ஜினீயரிங்கில் 3-ம் ஆண்டு படிக்கும் ரிஷப்கவுசிக் என்ற மாணவர், தெருவிலிருந்து மீட்கப்பட்ட ஒரு நாய்க்குட்டியை வாங்கி வளர்த்து வருகிறார்.
ரிஷப் அந்த வளர்ப்பு நாய்க்குட்டியுடன் இந்தியா திரும்ப ஆசைப்படுகிறார். ஆனால், அவருக்கு நாய்க்குட்டியை உடன் அழைத்து செல்ல அனுமதி கிடைக்கவில்லை. இதனால், இந்தியா திரும்ப அவர் மறுத்திருக்கிறார்.
இது குறித்து ரிஷப் கூறியதாவது -
என் வளர்ப்பு நாயான ‘மகிபூ’வுடன் நான் இந்தியா திரும்ப அனுமதி கிடைக்கவே இல்லை. இதனால், என் நாய்க்குட்டியை இங்கேயே விட்டுவர எனக்கு மனம் கிடையாது. நான் இங்கே இருப்பது ஆபத்துதான். அதை நான் நன்கு அறிவேன். என் நாய்க்குட்டியை இங்கு விட்டுவிட்டு வந்தால் என் நாயை யார் பார்த்துப்பார்?
இவ்வாறு அவர் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.