ரஷ்யாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் குழு பெலாரஸ் சென்றடைந்தது
உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் மீது 5-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களை குறி வைத்து ரஷ்ய ராணுவ வீரர்கள் பயங்கரமாக சண்டையிட்டு வருகிறார்கள்.
உக்ரைன் - ரஷ்யா போரால் அப்பாவி மக்கள் உயிரிழந்து வருகிறார்கள். நாளுக்கு நாள் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
ரஷ்யாவின் இந்த செயலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. மேலும், உக்ரைனுக்கு ஆயுத மற்றும் நிதி உதவிகளை பல்வேறு உலக நாடுகள் வழங்கி வருகிறது.
போரை நிறுத்த வேண்டும் என்று உலக மக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இந்நிலையில், அமைதி பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது.
இதனையடுத்து, உக்ரைன் தனது பிரதிநிதிகளை பெலாரசின் கோமல் பகுதிக்கு அனுப்ப ஒப்புக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் குழு பெலாரஸ் சென்றடைந்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் போரை நிறுத்துவது தொடர்பாக பெலாரசில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.