உக்ரைன் - ரஷ்யா போர் - பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த பாகிஸ்தான் பெண் - வைரலாகும் வீடியோ
உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியது. இதனால், ரஷ்யா ராணுவ படைகளுக்கும், உக்ரைன் ராணுவ படைகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது.
ரஷ்யா போட்ட குண்டுமழையால் பல அப்பாவி பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இதனையடுத்து, மாணவர்கள் பலர் உக்ரைன் நாட்டை விட்டு வெளியேறி அவரவர் நாடுகளுக்கு திரும்பி வருகிறார்கள்.
உக்ரைனில் சிக்கித் தவித்த சுமார் 20,000த்திற்கும் மேற்பட்ட இந்தியர்களை மீட்கும் பணியை ஆப்ரேஷன் கங்கா என்ற பெயரில் மத்திய அரசு மேற்கொண்டிருக்கிறது.
தற்போது, உக்ரைனில் தற்காலிக போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
உக்ரைனில் சிக்கிய இந்தியவர்களை, உக்ரைனின் அண்டை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா, போலந்து உள்ளிட்ட நாடுகளுக்கு விரைந்து சென்றுவிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். அங்கிருந்து, ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட், இந்திய விமானப்படையின் விமானங்கள் மூலம் இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.
ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் பல ஆயிரக்கணக்கான இந்தியர்கள் இதுவரை மீட்கப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், உக்ரைனில் சிக்கித் தவித்த பாகிஸ்தானைச் சேர்ந்த ஆஸ்மா ஷபிக்யூ என்ற பெண்ணை இந்தியா மீட்டிருக்கிறது.
தன்னை மீட்டதற்காக ஆஸ்மா ஷபிக்யூ பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், தன்னை மீட்ட இந்திய தூதரகத்திற்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆஸ்மா கூறியதாவது -
என் பெயர் ஆஸ்மா ஷஃபிக். நான் பாகிஸ்தானை சேர்ந்தவள். உக்ரைனில் மிகவும் கடுமையான சூழ்நிலையில் நான் சிக்கித் தவித்தேன். அப்போது, அங்கிருந்து நான் இந்திய தூதரகத்தால் மீட்கப்பட்டுள்ளேன். என்னை மீட்பதற்கு உதவி செய்த கீவ்-இல் உள்ள இந்திய தூதரகத்திற்கும், இந்திய பிரதமர் மோடிக்கும் நான் நன்றி கூறிகிறேன். எங்களை ஆதரித்ததற்கு மிக்க நன்றி. இந்திய தூதரகத்தால் நான் நிச்சயம் பாதுகாப்பாக என் வீட்டிற்கு செல்வேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதனையடுத்து, இந்திய அதிகாரிகளால் மீட்கப்பட்டு, மேற்கத்திய உக்ரைனுக்கு செல்லும் ஆஸ்மாவை, அங்கிருந்து பாகிஸ்தான் அரசால் தாயகம் அழைத்துச் செல்லப்படுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.