உக்ரைனில் கடத்தப்பட்ட மேயரை விடுதலை செய்தது ரஷ்ய ராணுவம்
உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யா ராணுவ படைகளுக்கும், உக்ரைன் ராணுவ படைகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.
வான்வழி, தரை வழி, கடல் வழியாக மும்முனைகளிலிருந்து தாக்குதல்களை ரஷ்ய படை நடத்தி வருகிறது.
இத்தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்து வருகிறார்கள். உக்ரைனில் சிக்கிக்கொண்ட வெளிநாட்டு மக்கள் அவசர, அவசரமாக அந்தந்த நாட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.
நேற்று கனடா நாடாளுமன்றத்தில், அந்நாட்டு உறுப்பினர்களிடையே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி காணொளி மூலம் பேசினார். அப்போது பேசிய அதிபர் ஜெலன்ஸ்கி, உக்ரைனுக்கு கனடா அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி. உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதல் மனிதாபிமானமற்றது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதலில் 97 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார்.
கடந்த வாரம் உக்ரைனின் மெலிட்டோபோல் நகரை கடந்த வாரம் ரஷ்ய படையினர் கைப்பற்றினர். அப்போது, மேயர் இவான் பெடரோவைச் ரஷ்யப் படை சிறைப்பிடித்து கடத்தியது.
இதனையடுத்து, நடத்தப்பட்ட உக்ரைன் - ரஷ்ய பேச்சுவார்த்தையில் மேயரை விடுவிக்க வேண்டும் என்றால், ரஷ்ய வீரர்களை விடுவிக்க வேண்டும் என்று ரஷ்யா ராணுவம் கேட்டுக் கொண்டது.
இந்நிலையில், மேயர் இவான் பெடரோவ் நேற்று விடுவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையில், ரஷ்ய படை வீரர்கள் 9 பேரை உக்ரைன் அரசு விடுவித்துள்ளது.