‘கவலைப்படாதீங்க... உங்களை நாங்க ஒன்றும் செய்யமாட்டோம்...’ - இந்தியர்களை மீட்க ரஷ்யா உதவி
உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் மீது 9-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யா ராணுவ படைகளுக்கும், உக்ரைன் ராணுவ படைகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.
இந்தப் போரால் அப்பாவி பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து வருகிறார்கள். நேற்று 3-வது முறையாக கீவ் நகர் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்போவதாக ரஷ்யா உக்ரைனுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.
இன்று அதிகாலை, தெற்கு உக்ரைனின் எனர்ஹோடர் நகரில் உள்ள சபோரோஷியா அணுமின் நிலையம் மீது ரஷிய படைகள் நேரடியாக குறி வைத்து பயங்கரத் தாக்குதல் நடத்தியுள்ளன. இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில், உக்ரைனில் கார்கிவ், சுமியில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களையும், வெளிநாட்டினர்களையும் அங்கிருந்து வெளியேற்றி, ரஷ்யாவின் பெல்கோராட் பகுதிக்கு கொண்டு செல்ல 130 பேருந்துகள் தயாராக உள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.