உக்ரைன் எல்லை - சுமார் 20 மணி நேரம் கடும் குளிரில் சிக்கித் தவித்த இந்திய மாணவர்கள்
உக்ரைன் நாடு மீது ரஷ்ய ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உக்ரைன் நாட்டில் அமைதி சீர்குலைந்துள்ளது. அடுத்தடுத்து நடத்தப்படும் குண்டு வெடிப்பு சம்பவங்களால் மக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.
இந்த குண்டு வெடிப்பில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். பலர் தங்களுடைய வீடுகளை விட்டு வெளியேறி பிற நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
எங்கு பார்த்தாலும் ரத்தக்கறைகளும், கட்டிடங்களுன் இடிபாடுகளும்தான் கிவியில் காணப்படுகிறது. இருக்க இடமின்றி உக்ரைன் மக்கள் நடுவீதியில் கிடக்கின்றனர்.
உலக நாடுகள் ரஷ்யாவின் இந்த செயலுக்கு கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், உக்ரைனிலிருந்து வெளியேறுவதற்காக இந்திய மாணவர்கள் ருமேனியா, அங்கேரி, போலந்து ஆகிய நாடுகளின் எல்லைகளுக்கு சென்றிருக்கிறார்கள். ஆனால், அங்கு பயங்கரமாக பனிப்பொழிந்து வருகிறது. இதனால், மக்களை குளிர் வாட்டி வருகிறது.
உக்ரைன் எல்லைக்கு சென்ற இந்திய மாணவர்கள் 20 மணிநேரமாக கடும் குளிரில் சிக்கித் தவித்திருக்கிறார்கள்.
லீவில் நகர், ஷெஹினியில் உள்ள தங்குமிடத்தில், பெண்களுக்கு மட்டுமே அனுமதி இருந்ததால், மாணவர்கள் அனைவரும் குளிரில் நடுங்கியபடியே வெளியே நின்று கொண்டிருந்தார்கள்.