உக்ரைன் - ரஷ்யா போர் - 249 இந்தியர்களுடன் 5-வது சிறப்பு விமானம் டெல்லி வந்தடைந்தது
உக்ரைன் நாடு மீது ரஷ்ய ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உக்ரைன் நாட்டில் அமைதி சீர்குலைந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் - ரஷ்யா போரால் அப்பாவி மக்கள் உயிரிழந்து வருகிறார்கள். நாளுக்கு நாள் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில், உக்ரைனில் இந்தியர்கள் பலர் சிக்கிக்கொண்டுள்ளனர். அவர்களை மீட்கக்கோரி இந்திய மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதனையடுத்து, உக்ரைனில் சிக்கிக்கொண்டுள்ள இந்தியர்களை, அண்டை நாடுகள் உதவியுடன் மீட்கும் ஆபரேசன் கங்கா திட்டத்தின் கீழ் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், ருமேனியாவின் புகாரெஸ்ட் நகரிலிருந்து 5 விமானங்களும், ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரிலிருந்து 2 விமானங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த விமானங்களின் பட்டியலை வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் ஷ்ரிங்லா வெளியிட்டிருக்கிறார். ருமேனியா தலைநகர், புகாரெஸ்ட் விமான நிலையத்திலிருந்து 249 இந்தியர்களுடன் 5-வது சிறப்பு விமானம் மூலம் இன்று அதிகாலை டெல்லிக்கு புறப்பட்டது.
இந்த விமானம் இன்று காலை 8 மணி அளவில் டெல்லி விமான நிலையம் வந்தடைந்துள்ளது.
விமான நிலையத்தில் வந்திறங்கிய இந்தியர்களை, அவர்களது உறவினர்களும், பெற்றோர்களும் கட்டித் தழுவி கண்ணீர் மல்க வரவேற்றனர்.