11 லட்சம் உக்ரைன் மக்களை வலுக்கட்டாயமாக ரஷ்யாவிற்கு கடத்தல் - வெளியான அதிர்ச்சி தகவல்
கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி முதல் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இருதரப்பிலும் நடத்தப்பட்ட தாக்குதல்களால் ஏராளமான மனித உயிரிழப்புகள் ஏற்பட்டு உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.
போரை கைவிடுமாறு உலக நாடுகள் கோரிக்கை விடுத்தும், பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை.
உக்ரைன் பகுதியில் அதிக இழப்பை ஏற்படுத்த ரஷ்ய ராணுவம் திட்டமிட்டு போர் தொடுத்து வருகிறது. பெண்கள் மற்றும் சிறுமிகளை பலாத்காரம் செய்தும் அப்பாவி மக்களை கொன்று குவித்தும் நாசப்படுத்தி வருகின்றனர்.
உக்ரைனில் அதிகப்படியான மனித சடலங்கள் மீட்கப்பட்டன. அந்த சடலங்கள் அனைத்தும் கைகள் கட்டப்பட்ட நிலையில், கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டு, அருகில் வைத்து துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், போர் நடந்து வரும் நிலையில், டொனெட்ஸ்க், லூகான்ஸ் பகுதிகளிலிருந்து 2 லட்சம் குழந்தைகள் உள்பட 11 லட்சம் உக்ரைனியர்கள் ரஷ்யாவிற்கு வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவலை உக்ரைன் வெளியிட்டுள்ளது. ஆனால், இந்த குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது. மக்களின் விருப்பத்தின் பேரிலேயே அவர்கள் ரஷ்யாவிற்கு அழைத்து செல்லப்பட்டதாக கூறியிருக்கிறது.