‘’ எல்லாமே ஆயில் பிசினஸ் ‘’ : உக்ரைன் - ரஷ்யா உரசலுக்கு இதுதான் முக்கிய காரணமா?
உலகத்தின் பதட்டத்தை அதிகரிக்கும் வகையில் ரஷ்யாவின் பின்புலத்தை கொண்ட கிளர்ச்சியாளர்கள் உக்ரேன் மீது தாக்குதலைத் தொடங்கிவிட்டனர். இதில் உயிர்பலிகளும் ஏற்பட்டது.
ஆனாலும் இது போன்ற தூண்டுதலுக்கு உக்ரேன் பதிலளிக்காது என உக்ரேன் அதிபர் விளாமிர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். இந்த நேரத்தில் ஜெர்மனி மற்றும் ரஷ்யா இடையேயான நார்டு ஸ்ட்ரீம் 2 என்னும் எரிவாயு குழாய் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.
இந்த போர் பதற்றம் அனைத்திற்கும் காரணம் எரிவாயு தொடர்பாக ஐரோப்பிய நாடுகள் மேல் ஆதிக்கம் செலுத்த ரஷ்யா நினைக்கிறது என்றும் அதை தடுக்க அமெரிக்கா நினைக்கிறது எனவும் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.
உலக யுத்தங்கள் அனைத்தும் உலகில் பிற நாடுகளின் மீது யார் அதிகம் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதை காட்டுவதற்கே என்பது நமது வரலாற்றை பார்க்கும்போதே நாம் புரிந்து கொள்ள முடியும்.
அந்த வகையில் இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் மீண்டும் ஒரு உலகப்போர் வரக்கூடாது என அமைதியை வலியுறுத்தும் சர்வதேச அமைப்புகள் நிறுவப்பட்டன. ஆனால் ஒருவேளை உக்ரேன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையே தற்போது மீண்டும் போர் மூண்டால் அந்த போரில் உக்ரேனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் களமிறங்குவது கண்டிப்பாக நடக்கும்.
எல்லாம் ஆயில் பிசினஸ் :
ஒரு வேளை அமெரிக்காவும் ரஷ்யாவும் எதிராக நின்றால் அது உலகப்போராக மாறும் நிலை உருவாகும். இவ்வாறு போரின் விளைவுகள் தீவிரமாக இருந்தாலும் இந்த போர் நடக்க மிக முக்கிய காரணமாகப் பார்க்கப்படுவது ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு கொடுப்பது யார் என்பதே ஆகும்.
ஐரோப்பிய நாடுகளின் எரிசக்தி தேவையை 41 சதவீதம் தற்போது வரை ரஷ்யாவே தீர்த்து வருகிறது. முன்னர் 5 சதவீதம் வரை ஐரோப்பிய நாடுகளுக்கு எரிசக்தியை கொடுத்து வந்த அமெரிக்கா தற்போது 23 சதவீதமாக அதை உயர்த்தியுள்ளது.
ஏனென்றால் அதிக எரிசக்தியை ரஷ்யாவிடமிருந்து பெற்றால் ரஷ்யா அதையே ஐரோப்பாவின் மீது ஆதிக்கம் செலுத்த ஒரு ஆயுதமாக பயன்படுத்துமோ என்ற பயம் எப்போதுமே அமெரிக்காவுக்கு இருந்து வருகிறது. ஆனாலும் இந்த போட்டியில் ரஷ்யா முன்னிலையில் உள்ளதை அமெரிக்காவும் மறுக்கமுடியாது.
அது என்ன நார்ட் ஸ்ட்ரீம் குழாய்:
அவ்வாறு ரஷ்யாவில் இருந்து ஐரோப்பிய நாடான ஜெர்மனிக்கு பல நாடுகளின் மூலம் நிலத்தின் வழியாகவும் கடலுக்கு அடியிலும் குழாய் மூலம் எரிவாயு சென்று கொண்டுள்ளது. அதில் மிக முக்கியமாக பார்க்கப்படுவது ரஷ்யாவிலிருந்து பாலிடிக் கடல் மூலமாக ஜெர்மனிக்கு செல்லும் நார்ட் ஸ்ட்ரீம் என்ற குழாய்தான்.
இந்த குழாய் ரஷ்யாவின் வீபர்க் என்னும் பகுதியிலிருந்து ஜெர்மனிக்கு கடல் வழியாக செல்கிறது. பிற குழாய்களைப் போல ஃபின்லாந்து போலாந்து உக்ரேன் போன்ற நாடுகளுக்கு செல்லாமல் நேரடியாக ஜெர்மனியை சென்றடைகிறது.
இந்த நார்ட் ஸ்ட்ரீம் என்னும் குழாயைப் போல நார்ட் ஸ்ட்ரீம் 2 என்னும் குழாயை ஏற்படுத்த ரஷ்யா முயற்சி செய்தது. 2018ல் நார்ட் ஸ்ட்ரீம் 2 பணி தொடங்கி பல ஐரோப்பிய நாடுகளை எதிர்த்து 2021ல் இந்த பணி அதிகாரப்பூர்வமாக முடிந்தது.
ஆனால் இன்னும் இதனை செயல்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. இந்த நார்ட் ஸ்ட்ரீம்2 என்னும் குழாய்க்கு அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதை ரஷ்யா ஒரு ஆயுதமாக பயன்படுத்தும் என அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது.
மேலும் போலாந்து இந்த நார்ட் ஸ்ட்ரீம் 2 என்ற திட்டம் எரிவாயு சப்ளையில் இருந்து தங்கள் நாட்டை முழுமையாக விலக்கிவிட்டதாக எண்ணுகிறது. மேலும் உக்ரேன் வழியாக மூன்று எரிவாயு குழாய்கள் ஜெர்மனிக்கு செல்கிறது.
ஒரு வேளை நார்ட் ஸ்ட்ரீம் 2 செயல்பாட்டுக்கு வந்துவிட்டால் உக்ரேன் நாட்டின் இந்த மூன்று குழாய்களை ரஷ்யா செயலிழக்க செய்துவிடுமோ என உக்ரேன் அச்சம் கொண்டுள்ளது. மேலும் உக்ரேன் நாட்டுக்கு இந்த குழாய்கள் செல்லும் பாதைகள் மூலமாக பல கோடி யூரோக்கள் வருமானம் கிடைக்கிறது.
ஒரு வேளை ரஷ்யா இதை செயலிழக்க செய்தால் நாட்டின் மிகப் பெரிய வருமானமான எரிவாயு பாதை செல்வதோடு , ரஷ்யாவையே பிற விஷயங்களுக்காக நம்பி இருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதற்காக ஐரோப்பிய நாடுகளுடம் தங்களை இணைக்க முற்படுகிறது உக்ரேன்.
ரஷ்யாவை குறி வைக்கும் அமெரிக்கா:
இன்னொரு புறம் அமெரிக்கா ரஷ்யாவின் இந்த எரிவாயு ஆதிக்கத்தை தகர்க்க நினைக்கிறது. எனவே, உக்ரைனை பயன்படுத்தி ரஷ்யாவின் கனவை தகர்க்க அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் வரிந்து கட்டி களம் இறங்கி உள்ளன.
உக்ரைன் மீது ரஷ்யா கைவைத்தால், அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ படைகள் உக்ரைனை காப்பாற்றுகிறதோ இல்லையா, நார்டு ஸ்ட்ரீம் திட்டக் குழாய்களை துவம்சம் செய்வதைத்தான் முக்கிய குறிக்கோளாக கொண்டு செயல்படும். அந்த பயத்தினால்தான் ரஷ்யாவும் உக்ரைன் மீது கைவைக்க தயக்கம் காட்டி வருகிறது.
இதனால் ராஜ தந்திரமாக தங்களுடைய கிளர்ச்சி படைகளிடம் ஆயுதங்களைக் கொடுத்து தாக்க முற்பட்டுள்ளது. இதனால்தான் இவ்வளவு நாளாக அமைதியாக இருந்த கிளர்ச்சி படைகள் இன்று கிளர்ந்து எழத் தொடங்கியுள்ளனர்.
உலகம் ஏற்கனவே கொரோனா போன்ற தொற்றுடன் இன்றுவரை போராடிக்கொண்டிருக்கும்போது நேரடியாக இது போன்ற இன்னொரு போர் நடந்தால் மக்களின் நிலை என்னவாகும் என்பது கேள்விக்குறியே. ஆதிக்கத்துக்காக நடக்கும் ஒவ்வொரு போர்களின் கடைசியில் பாதிக்கப்படுவது அப்பாவி மக்களே
- ((கட்டுரை : ஜெயலஷ்மி ராமலிங்கம் ஐபிசி தமிழ்))