"தாக்குதலை நிறுத்துமாறு ரஷ்யாவிடம் இந்தியா கேட்க வேண்டும்" - உக்ரைன் அரசு
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 11 நாட்களாக கடும் போர் நடைபெற்று வரும் நிலையில் உக்ரைனின் முக்கிய நகரங்களை ரஷ்யா கைப்பற்றி வருகிறது.
தரை, வான், கடல் என மும்முனை தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள ரஷ்யா, உக்ரைனில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அணு உலையயையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், உக்ரைனின் வான் பரப்பில் விமானங்கள் பறக்க தடை விதிப்பவர்களும் யுத்தத்தில் பங்கேற்பவர்களாக கருதப்பட்டு அதற்கான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என நேட்டோ நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் புதின் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த எச்சரிக்கையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் உக்ரைனிலிருந்து 10 லட்சம் பேர் அண்டை நாடுகளுக்கு ஓட்டம் பிடித்துள்ளனர். இன்னும் 40 லட்சம் பேர் அங்கிருந்து வெளியேறுவார்கள் என ஐரோப்பிய யூனியன் கணித்துள்ளது.
ரஷ்ய படையினரின் தொடர் ஏவுகணைகள் தாக்குதல், குண்டுமழை, பீரங்கி தாக்குதல், சரமாரி துப்பாக்கிச்சூடுகளால் உக்ரைன் உருக்குலைந்து வருகிறது.
இந்நிலையில், மீட்பு பணிக்காகவும், மனிதாபிமான அடிப்படையிலும் உக்ரைனின் 2 நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தம் செய்யப்படுவதாக ரஷ்யா நேற்று அறிவித்திருந்த நிலையில் அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை.
உக்ரைன் மீதான தாக்குதல் மீண்டும் தொடங்கிவிட்டது என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.
இந்த நிலையில் தான் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் நினைத்தால் போரை நிறுத்த முடியும் என உக்ரைன் அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் தொலைகாட்சியில் உரையாற்றியதாவது,
"ஆசியா , ஆப்ரிக்காவில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் உக்ரைன் நாட்டில் படித்து வர பெரும் உதவியாக இருந்துள்ளோம்.
வெளி நாட்டு மாணவர்களை நாங்கள் பத்திரமாக வெளியேற்ற சிறப்பான முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம். இன்னும் பத்திரமாக மீட்க ரஷ்யா தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும்.
தற்போது போரில் வெற்றி பெற்றதாக காட்டி கொள்ள ரஷ்யா முயற்சிக்கிறது. நாங்கள் எங்கள் மண்ணை காப்பாற்ற போராடுகிறோம்.
இந்தியா, சீனா , நைஜீரியா நாடுகள் ரஷ்யாவிடம் தாக்குதலை நிறுத்த கேட்க வேண்டும். தற்போதைய போரை யாரும் விரும்பவில்லை என ரஷ்ய அதிபர் புதினிடம் பேச வேண்டும்.” என பேசினார்.