எங்க நாட்டில் உள்ள 2 லட்சம் குழந்தைகளை ரஷ்யா கடத்திவிட்டது : உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி
உக்ரைனை சேர்ந்த 2 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகளை ரஷ்ய ராணுவம் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார்.
நேட்டோ அமைப்பில் இணைய முயற்சித்தது மற்றும் மேற்கத்திய நாடுகளுடன் உறவு வைத்தது உள்ளிட்ட உக்ரைன் நடவடிக்கைகளால் ஆத்திரம் அடைந்த ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி போரை தொடங்கியது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி 3 மாதங்களை கடந்த நிலையில் போரின் தாக்கம் என்பது இன்றும் குறையாமல் உள்ளது.
லட்சக்கணக்கான மக்கள் நாட்டை காலி செய்து விட்டு அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போர் நூறாவது நாளை எட்டியுள்ள நிலையில், இதனால் பெரும் பொருட்சேதம் மற்றும் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். முக்கிய துறைமுக நகரங்களை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து வரும் உலக நாடுகள், உக்ரைனுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இதேபோல் ரஷ்யாவிற்கு எதிர்வினையாற்றும் வகையில் பொருளாதார தடைகளையும் விதித்தன.
இருந்த போதிலும் ரஷ்யா போரை நிறுத்தவில்லை. இந்நிலையில், இதுவரையில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் வலுக்கட்டாயமாக ரஷ்யாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாட்டு மக்களிடம் உரையாற்றிய ஜெலென்ஸ்கி, ஆதரவற்ற இல்லங்களில் இருந்தும் பெற்றோர்களிடம் இருந்தும் குழந்தைகள் வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்பட்டதாக கூறினார். போர்க் குற்றங்களை இழைத்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறிய ஜெலன்ஸ்கி, உக்ரைனை முழுவதுமாக கைப்பற்ற முடியாது எனவும் உக்ரைன் மக்கள் ஒருபோதும் சரணடைய மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.