4 பகுதிகளை இணைத்த ரஷ்யா... அலெர்ட் ஆன உக்ரைன் - நேட்டோவில் சேர உறுதி!
நேட்டோ அமைப்பில் சேருவதற்கான விரைவுபடுத்தப்பட்ட விண்ணப்பத்தை, உக்ரைன் அதிபர் சமர்ப்பித்துள்ளார்.
ரஷ்ய போர்
நடப்பு ஆண்டு தொடக்கத்தில், பிரிட்டன், அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட நாடுகள் அடங்கிய நேட்டோ அமைப்பில் இணைய உக்ரைன் நாடு விருப்பம் தெரிவித்தது. இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்புத் தெரிவித்தது.
இதனால் அதிருப்தி அடைந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் நாடு மீது போர் தொடுக்க உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்த நடைபெற்ற போர் உலக நாடுகளிடையே தாக்கத்தை ஏற்படுத்தியது. இன்றளவும் போர் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
ரஷ்யாவுடன் இணைப்பு
போரை நிறுத்தும்படி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடம் உலக நாடுகளின் தலைவர்கள் பல முறை வலியுறுத்தியும், அவர் அதை கேட்கவில்லை. இந்நிலையில் இன்று, உக்ரைன் நாட்டின் நான்கு பகுதிகள், ரஷ்யாவுடன் இணைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விழாவில் பங்கேற்ற அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் நாட்டின், டோனெட்ஸ்க், லுஹன்ஸ்க், கெர்சான், ஜப்போரிஸியா ஆகிய பகுதிகள், இன்று முதல், அதிகாரப்பூர்வமாக, ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டு விட்டதாகத் தெரிவித்தார்.
உக்ரைன் உறுதி
இதனால், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, நேட்டோ அமைப்பில் இணைவதற்கான விரைவுபடுத்தப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பித்து உள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "நேட்டோ அமைப்பில் இணைவதற்கான விரைவான விண்ணபத்தில் கையெழுத்திடுவதன் மூலம்
ஒரு தீர்க்கமான நடவடிக்கையை எடுத்துள்ளோம். ரஷ்ய அதிபராக புடின் இருக்கும் வரை உக்ரைன், ரஷ்யாவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தாது. புதிய அதிபருடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துவோம்" என கூறினார்.