“இதோட எல்லாத்தையும் நிறுத்திக்கோங்க” - உக்ரைனுக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை

russia ukraine UkraineRussiaWar
By Petchi Avudaiappan Apr 14, 2022 09:51 PM GMT
Report

உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யா, அந்நாட்டிற்கு கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. 

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைந்ததன் எதிரொலியாக அங்கு ரஷ்யா 51வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இதனால் ஏராளமான உயிரிழப்புகளும், பொருளாதார இழப்புகளும் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் தலைநகர் கீவ், மரியுபோல், கார்கீவ், கார்சன் உள்பட பல்வேறு நகரங்களில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

எனினும் பல பகுதிகளில் உக்ரைன் ராணுவம் தக்க பதிலடியைக் கொடுக்க தொடங்கியதால் போர் தொடங்கிய அடுத்து சில நாட்களில் உக்ரைன் நாட்டில் ரஷ்யாவால் எதிர்பார்த்த அளவுக்கு முன்னேற முடியவில்லை. அதேசமயம் பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் கடைசியாக துருக்கியில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் இரு தரப்பினருக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து போர் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து  ரஷ்ய ராணுவத்தைக் குறி வைத்தும், ரஷ்ய எல்லைக்குள் சென்றும் உக்ரைன் தாக்குதல் நடத்தி வருவதாகச் செய்திகள் வெளியாகின. இதுபோன்ற தகவல்கள் நிலைமையை மேலும் மோசமாக்கும் வகையிலேயே அமைந்துள்ளது. இந்நிலையில் ரஷ்யாவில் உக்ரைன் தாக்குதல் நடத்தினால், கீவ் நகரில் உள்ள கண்ட்ரோல் சென்டர்ஸை  குறி வைத்துத் தாக்குதலைத் தொடங்குவோம் என்று ரஷ்ய ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.