இங்கிலாந்தில் பொதுத்தேர்தல்; ஆட்சி இழந்த ரிஷி சுனக் - தோல்விக்கு பின் சொன்னது இதுதான்!
இங்கிலாந்தில் பொதுத்தேர்தலில் ரிஷி சுனக் படுதோல்வி அடைந்துள்ளார்.
ரிஷி சுனக்..
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 650 தொகுதிகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி, பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி, லிபரெல் டெமோகிராட்ஸ் கட்சி ஆகியவை வேட்பாளர்களை களமிறக்கினர்.
வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.அதில் துவக்கத்தில் இருந்தே கீர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தது. பெரும்பான்மைக்கு தேவையான 326 இடங்களுக்கும் மேல் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றது.
கீர் ஸ்டார்மர் தனது சொந்த தொகுதியில் வெற்றி பெற்றார். அதன்படி, கீர் ஸ்டார்மர் பிரிட்டனின் புதிய பிரதமராக பொறுப்பேற்க உள்ளார். இந்த நிலையில், ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சி படுதோல்வியைச் சந்தித்துள்ளது.
தோல்விக்கு பின்..
பிரிட்டன் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிக மோசமான தோல்வி ரிஷி சுனக் கட்சிக்கு கிடைத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக கன்ரச்வேடிவ் அரசு எடுத்த மோசமான முடிவுகளால் பொருளாதாரம் தடுமாறிக் கொண்டு இருக்கிறது. அதுவே இந்த தோல்விக்குக் காரணமாகும்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்தப் பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதற்காக அக்கட்சித் தலைவர் கீர் ஸ்டார்மரை தொலைப்பேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தேன். அதிகாரம் அமைதியாகவும் சட்டப்பூர்வமான முறையிலும் கைமாறும்.
நமது நாட்டின் ஸ்திரத்தன்மை மற்றும் எதிர்காலத்தில் நாம் அனைவரும் நம்பிக்கையுடன் இருக்கிறோம். இந்த தோல்விக்கு கன்சர்வேடிவ் கட்சியினரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இந்த தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன்" என்றார்.