வருங்காலத்தில் தலைவர்... உதயநிதியால் தான் நீட் தேர்வு ரத்து...துரைமுருகன் உறுதி
வருங்காலத்தில் திமுகவின் தலைவராகும் தகுதி உதயநிதிக்கு உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
உண்ணாவிரத போராட்டம்
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக சார்பில் நீட் தேர்வை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் துவங்கியுள்ளது. திமுகவின் இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி ஆகியவற்றின் சார்பில் நடத்தப்படும் இந்த போராட்டத்தை தமிழகத்தின் நீர்வள துறை அமைச்சரும், திமுகவின் பொதுச்செயலாளருமான துரைமுருகன் துவங்கி வைத்தார்.
உதயநிதி தலைவர் தகுதியுள்ளது
போராட்டத்தில் பேசிய அமைச்சர் துரைமுருகன், "பிற்படுத்தப்பட்டோர் மருத்துவராகும் வாய்ப்பை நீட் தேர்வு பறித்துள்ளது என குற்றம்சாட்டி, ஆதிக்க சக்தியால் நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது என விமர்சனம் செய்தார்.
மேலும், அரசியல்வாதிகள் மட்டுமில்லாமல், கல்வியாளர்களும் நீட் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர் என குறிப்பிட்ட அவர், இந்தி திணிப்பை எதிர்த்து உயிர்விட்டவர்களின் சாபத்தால் அந்த ஆட்சி ஒழிந்தது என அதிமுகவை குறிப்பிட்டு விமர்சித்து, அதேபோன்று நீட் தேர்வை திணிக்கும் ஆட்சியும் ஒழிந்துவிடும் என கூறினார்.
கலைஞர் கருணாநிதி, மு.க.ஸ்டாலினை தொடர்ந்து தற்போது உதயநிதியுடன் போராட்டத்தில் பங்கேற்றுள்ளேன் என பேசிய துரைமுருகன், உதயநிதியால் நீட் தேர்வு ரத்து என்ற நிலை ஏற்படும் என்று கூறி, வரும் காலத்தில் தலைவராகும் தகுதி உதயநிதிக்கு உள்ளது என்று பேசினார்.