பல ஆண்டு போராட்டம் நிறைவேறியது - மனித கழிவை அகற்றும் இயந்திரம் அறிமுகம்!
இயந்திரத்தை கொண்டு மனித கழிவை அகற்றும் முறையை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.
மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் கொடுமை 1993-ம் ஆண்டு தடை செய்யப்பட்டதுடன், 2013-ல் இந்த தடை சட்டமாக இயற்றப்பட்டு பல திருத்தங்களுடன் மீண்டும் அமல்படுத்தப்பட்டது.
2014-ல் உச்ச நீதிமன்றம், அனைத்து மாநில அரசுகளும் இச்சட்டத்தை பின்பற்றி சாக்கடை அள்ளும் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவதை தடை செய்வதுடன், அப்பணியில் இருக்கும் தொழிலாளர்களின் வாழ்வை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இருப்பினும், கூலி ஆட்களை வைத்து கழிவு சாக்கடையை சுத்தம் செய்யும் அவலம் தொடர்ந்துதான் வருகிறது.
இந்த நிலையில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், தமது தொகுதியில் இயந்திரத்தை கொண்டு கழிவை அகற்றும் முறையை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
இதுகுறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின், மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றுவதை ஒழிப்போமென தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தோம். இதன்படி எனது முன்னெடுப்பில் இயந்திரத்தைக் கொண்டு கழிவை அகற்றும் முறையை முதன்முறையாக சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் அறிமுகம் செய்து, கொய்யாத்தோப்பு பகுதியில் அதன் செயல்பாட்டை துவக்கி வைத்தோம்' எனக் கூறினார்.