காலால் இன்னும் நன்றாக மிதிக்கட்டும்; பரிதாபம் மட்டுமே வருகிறது - வீடியோவுக்கு உதயநிதி ரியாக்சன்
சங்கிகளைப் பார்த்து எனக்குப் பரிதாபம் மட்டுமே வருகிறது என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சனாதன பேச்சு
கடந்த ஆண்டு சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு, "சனாதனம் வைரஸ் போன்றது அதை ஒழிக்க வேண்டும்" என உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்தது. வட மாநிலங்களில் உதயநிதியின் உருவ பொம்மை கொளுத்தப்பட்டது.
சமீபத்தில் கூட லட்டு சர்ச்சையின் போது, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழகத்தை சேர்ந்த இளம் அரசியல்வாதி ஒருவர் சனாதன தர்மம் ஒரு வைரஸ் என்றும் அதனை கூண்டோடு அழித்திட வேண்டும் என்றும் பேசியிருக்கிறார். இப்படி அவர் மாற்று மதத்தை சேர்ந்தவர்களைப் பற்றி பேச முடியுமா? என பேசியது சமூகவலைத்தளத்தில் வைரலாகியது.
உதயநிதி ஸ்டாலின்
இந்நிலையில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் புகைப்படத்தை ஆந்திர மாநிலத்தில் உள்ள கோவில் ஒன்றின் படிக்கட்டில் ஒட்டி அதை பலரும் மிதித்து செல்லும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த விடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து பதிலடி கொடுத்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், "என்னை இழிவு செய்வதாக நினைத்து தங்களின் அரசியல் முதிர்ச்சி இவ்வளவு தான் என்று அம்பலப்பட்டு நிற்கும் சங்கிகளைப் பார்த்து எனக்குப் பரிதாபம் மட்டுமே வருகிறது!
கொள்கை எதிரிகளுக்கு நம் மீது இவ்வளவு ஆத்திரம் வருகிறது என்றால், திராவிடக் கொள்கையினை நான் எந்தளவுக்குச் சரியாக பின்பற்றுகிறேன் என்பதற்கான சான்றிதழாகவே இதனைப் பார்க்கிறேன்.
சமத்துவப்பாதையில் நடைபோடுவோம்
தந்தை பெரியார் மீது செருப்புகளை வீசினர். அண்ணல் அம்பேத்கரை எவ்வளவோ அவமதித்தார்கள். பேரறிஞர் அண்ணாவை வசைபாடி மகிழ்ந்தனர். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் மீது ஏச்சுக்களையும் - பேச்சுக்களையும் தொடுத்தனர். நம் கழகத் தலைவர் மீது வீசப்படாத கடுஞ்சொற்கள் இல்லை.
அனைவரும் சமம் என்கிற நமது கொள்கை அவர்களுக்கு எரிச்சலூட்டுகிறது. பிறப்பாலும் - மதத்தாலும் பிரித்தாளும் கொள்கையைப் பேசி மக்களை வெல்ல முடியாத அவர்களின் விரக்தி தான் நம்முடைய வெற்றி. என் புகைப்படத்தை அவர்கள் காலால் இன்னும் நன்கு மிதிக்கட்டும். அவர்களின் அழுக்கேறிய மூளையை நம்மால் சுத்தம் செய்ய முடியாது. அவர்களின் கால்களாவது சுத்தமாகட்டும்.
என்னை இழிவு செய்வதாக நினைத்து தங்களின் அரசியல் முதிர்ச்சி இவ்வளவு தான் என்று அம்பலப்பட்டு நிற்கும் சங்கிகளைப் பார்த்து எனக்குப் பரிதாபம் மட்டுமே வருகிறது!
— Udhay (@Udhaystalin) October 9, 2024
கொள்கை எதிரிகளுக்கு நம் மீது இவ்வளவு ஆத்திரம் வருகிறது என்றால், திராவிடக் கொள்கையினை நான் எந்தளவுக்குச் சரியாக… pic.twitter.com/rlLFPHUoJL
கழக உடன்பிறப்புகள் இதைக்கண்டு கோபமுற வேண்டாம். இதற்கு எதிர்வினையாற்றுவதை – உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்த்து, தந்தை பெரியார் - அண்ணல் அம்பேத்கர் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் - கழகத்தலைவர் அவர்கள் வழியில் பகுத்தறிவு - சமத்துவப் பாதையில் என்றும் அயராது நடை போடுவோம்!" என குறிப்பிட்டுள்ளார்.