தாய்மாமன் காது குத்தும் திட்டம்: உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்நாடு காவல்துறை- தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறைகள் மீதான மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றது.
இதன்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், சட்டம் ஒழுங்கு பிரச்சனை சார்ந்த நான் வைக்கும் கேள்விகளுக்கு முதலமைச்சர் உரிய பதிலை வழங்குவார் என நம்பி எனது உரையை தொடங்குகிறேன்.
திமுக ஆட்சியில் கொலை, பாலியல் குற்றங்கள், சாதிய பாகுபாடு கொலை பெருமளவு குறைந்திருப்பதாக காவல்துறை கொள்கை விளக்க குறிப்பில் நீங்களே தெரிவித்துள்ளீர்கள், அதற்கு நன்றி.
தவெக ஆட்சி அமைந்த 116 நாட்களில் புதிய திட்டங்கள் கொண்டு வந்ததை விட எங்கள் திட்டங்களின் பெயரை மாற்றுகிறீர்கள் அல்லது திட்டத்தை ரத்து செய்கிறீர்கள்.
திமுக ஆட்சியில் தமிழ்நாடு டாப் கியரில் சென்று கொண்டிருந்தது, ஆனால் தற்போது ரிவர்ஸ் கியரில் சென்று கொண்டிருக்கிறது.
விவசாய கடன் முழுமையாக தள்ளுபடி, ஆண்டுக்கு 6 சிலிண்டர், அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் என அறிவிப்புகளை வெளியிட்டு விட்டு தற்போது அரைகுறையாக மட்டும் நிறைவேற்றுகிறீர்கள்.

ஆனால் அரசின் மொத்த அறிவிப்புகளுக்கும் சேர்த்து தாய்மாமன் காது குத்தும் திட்டம் என வைத்துக்கொள்ளலாம்.
இதுவரை எந்த கேள்விக்கும் முதலமைச்சர் பதில் சொல்லவில்லை, ஒரு கேள்விக்கு மற்றொரு அமைச்சர் பதில் சொல்கிறார்.
டிவி சீரியலில் வரும் கதாபாத்திரம் போல அவருக்கு பதில் இவர், இவருக்கு பதில் அவர் என்பது போல அமைச்சர்கள் பதில் அளிக்கின்றனர்.
தவெக ஆட்சியில் 10 ஆணவக் கொலைகள் நடந்துள்ளன, கடந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கை குறைகூறிவிட்டு தற்போது தனிமனித ஒழுக்கம் என்கிறார்கள்.
இந்த நிலை எப்போது மாறும் என்பதை முதலமைச்சர் பதிலுரையும் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தார்.
