திமுகவுக்கு போடும் ஓட்டுதான் பிரதமர் மோடிக்கு வைக்கிற வேட்டு - அமைச்சர் உதயநிதி பேச்சு!
ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின்
சேலம் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் செல்வகணபதி தேர்தலில் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர் "திமுகவுக்கு போடும் ஓட்டுதான் பிரதமர் மோடிக்கு வைக்கிற வேட்டு.
ஏனென்றால், பிரதமர் மோடிதான் தமிழக மக்களுக்கு அடிக்கடி வேட்டு வைக்கிறார். தமிழக மக்களை கண்டுகொள்வதில்லை. 2021-ல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வரானார் மு.க.ஸ்டாலின். ஆனால், தவழ்ந்து முதல்வரானவர் ஒருவர் இருக்கிறார். தவழ்ந்து சென்ற புகைப்படத்தை காட்டியதால் எடப்பாடி பழனிசாமிக்கு என் மீது கோபம் வருகிறது.
வெற்றிபெற முடியாது
உதயநிதிக்கு வேறு வேலையே இல்லை என்கிறார். சசிகலாவுக்கு துரோகம் செய்தவர் இபிஎஸ். அவருக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் துரோகம் செய்தவர் பழனிசாமி. அவரை போல திமுக காரர்கள் பச்சோந்தி கிடையாது. பிரதமர் மோடி தமிழகம் வருவதில்லை.
ஆனால், இப்போது தேர்தல் நேரம் என்பதால் அடிக்கடி தமிழகம் வருகிறார். இன்றுகூட சென்னை வருகிறார். 2026 வரை தமிழகத்தில் வீடு எடுத்து தங்கினாலும் பிரதமர் மோடியால் வெற்றிபெற முடியாது. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் சேலத்திலிருந்து ஒரே ஒரு எம்எல்ஏவை தான் திமுக சார்பில் தேர்ந்தெடுத்தீர்கள்.
எடப்பாடியில் நான் தெரு தெருவாக பிரச்சாரம் செய்தேன். எனினும் எங்களுக்கு பெரிய நாமத்தை போட்டீர்கள். இனியும் அந்த தவறை செய்ய மாட்டீர்கள் என நம்புகிறேன்” என்று உதயநிதி பேசினார்.