ஆளுநர் மக்களின் மனநிலை புரியாமல் திமிராக பேசுகிறார் - உதயநிதி கண்டனம்

Udhayanidhi Stalin DMK Governor of Tamil Nadu
By Karthick Aug 14, 2023 11:47 AM GMT
Report

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக ஆளுநர் மக்களின் மனநிலை புரியாமல் திமிராக பேசுவதாக திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் திட்டவட்டம்  

udhayanidhi-slams-rn-ravi

அண்மையில் நடந்த கலந்துரையாடல் ஒன்றில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒரு போதும் நீட் விலக்கு மசோதாவில் கையெழுத்திட மாட்டேன் என உறுதியாக கூறியிருந்தார். அவர் கூறிய சில தினங்களிலேயே சென்னையை சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன் நீட் தேர்வில் போதுமான மதிப்பெண் பெற முடியாத காரணத்தால், தற்கொலை செய்துகொள்ள தந்தையும் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இது குறித்து தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கேள்வி கேட்கப்பட்டது.


உதயநிதி பதில்  

அதற்கு பதிலளித்து பேசிய அவர்,மாணவன் ஜெகதீஸ்வரன், அவரது தந்தை தற்கொலை செய்து கொண்டது மிகவும் வருந்தத்தக்க விஷயம் என குறிப்பிட்டு, ஆனால் ஒன்றிய பாஜக அரசு இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என விமர்சனம் செய்தார்.

நீட் தேர்வை ரத்து செய்வதற்கான நடவடிக்கையில் தமிழக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது என்றும் இரண்டு முறை இதுதொடர்பான மசோதாவும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்ட உதயநிதி ஸ்டாலின், ஆனால் இங்குள்ள ஆளுநரோ, தமிழக மக்களின் மனநிலையை புரிந்துகொள்ளாமல் தனி உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என சாடினார். 

udhayanidhi-slams-rn-ravi

சமீபத்தில் கூட, நீட் விலக்கு மசோதாவுக்கு கையெழுத்து போட மாட்டேன் என்று ரொம்ப திமிராக அவர் பேசிருக்காரு என கடுமையாக விமர்சனம் செய்த உதயநிதி, இதிலிருந்தே அவரின் அறியாமை வெளிப்படுகிறது என கூறி, நீட் தேர்வை ரத்து செய்ய திமுக தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தும் என உறுதிபட தெரிவித்தார்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு வேண்டாம் என கூறும் மாநிலங்களுக்கு நீட் தேர்வை ரத்து செய்யும் உரிமை வழங்கப்படும் எனக் ராகுல் காந்தி கூறியதை குறிப்பிட்டு, எனவே, மாணவர்கள் மனம் தளர வேண்டாம் என்றும் தவறான முடிவை யாரும் எடுக்க வேண்டாம். என்று உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.