சென்னை என்னும் குழந்தைக்கு தாய் இவர்கள்தான் - உதயநிதி ஸ்டாலின் பாராட்டு
தூய்மை பணியாளர்களால் மழை பெய்த சுவடே தெரியாத அளவிற்கு சென்னை மாறியுள்ளது என உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
பாராட்டு விழா
சென்னை கிழக்கு மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் களத்தில் பணியாற்றிய தூய்மை பணியாளர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட 1000 க்கும் மேற்பட்ட மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன்பின் அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.
உதயநிதி ஸ்டாலின்
இந்த நிகழ்வில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், "ஒரு குழந்தையை அம்மா காலையில் குளிக்க வைத்து, கிளப்பி வெளியே அனுப்பினால் அந்த குழந்தை ஓடி ஆடி விளையாடி சேறும் மண்ணுமாக மீண்டும் மாலையில் வீட்டிற்கு வரும். அப்போது அந்த குழந்தை மீது அம்மாவிற்கு கோவம் வரும் ஆனால் அது செல்ல கோவமாகவே இருக்கும்.
இங்கு அந்த குழந்தை சென்னைதான், அம்மாவாக தூய்மை பணியாளர்கள்கள் உள்ளனர். உங்களது பணியால்தான் இன்று சென்னை 12 மணி நேரத்தில் மழை பெய்த சுவடே தெரியாத அளவிற்கு மாறியுள்ளது. நீங்கள் அனைவரும் மீண்டும் இதே போன்று பேரிடர் காலத்தில் சிறப்பாக பணியாற்ற வேண்டும்.
மழை முன்னெச்சரிக்கை
இந்த ஆண்டு மழை குறித்து முதலமைச்சர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளார். முக்கியமாக அனைத்து துறை அமைச்சர்களை அழைத்து ஆலோசனை மேற்கொண்டு, மழை பெய்தாலும் 3 மணி நேரத்திற்கு மேல் எங்கும் தண்ணீர் நிற்க கூடாது என உத்தரவிட்டார்.
அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றி இந்த மழையை நல்லபடியாக கையாண்டுள்ளோம். இதுபோன்ற காலத்தில் நாங்கள் எப்போதும் களத்தில் இருந்துள்ளோம். நீங்கள் இருக்கும் நம்பிக்கையில் நாங்கள் களத்தில் இருக்கிறோம்" என பேசினார்.