டெல்லியிலிருந்து வரும் காட்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன - உதயநிதி ஸ்டாலின் கண்டனம்
டெல்லி CJP போராட்டத்தில் தடியடி நடத்தப்பட்டதற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லி CJP போராட்டத்தில் தடியடி
நீட் தேர்வு முறைகேட்டிற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என கரப்பான் பூச்சி கட்சி (CJP) கடந்த 1 மாத காலமாக, டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது.

இந்நிலையில், இன்று கரப்பான் பூச்சி கட்சி சார்பில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முயற்சித்த போது, காவல்துறையினருக்கும் போராட்டக்குழுவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதில், காவல்துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தை கலைத்தனர்.
நாடாளுமன்றம் மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகையின் நுழைவுவாயில்கள் மூடப்பட்டு, அந்த பகுதியில் இணைய சேவை துண்டிக்கப்பட்டது.
இதனையடுத்து, காக்ரோச் ஜனதா கட்சியின் பிரதிநிதிகள் மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவைச் சந்தித்து தங்கள் கோரிக்கைகளை அடங்கிய மனுவை அளித்தனர்.

இதில் மருத்துவமனையில் உள்ள சோனம் வாங்சுக்கை விடுதலை செய்ய வேண்டும், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், நீட் தேர்வு தொடர்பாக உயிரை மாய்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என 3 முக்கிய கோரிக்கைகள் இருந்தது.
உதயநிதி ஸ்டாலின் கண்டனம்
இந்நிலையில், டெல்லியில் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியதற்கு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக அமைதியான முறையில் பேரணியில் பங்கேற்ற சிஜேபி இளைஞர்கள் மீது காவல்துறை காட்டிய அத்துமீறலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
டெல்லியிலிருந்து வரும் காட்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன.
அவர்களின் கவலைகளைக் களைவதற்குப் பதிலாக, அரசு தனது காவல்துறையைக் கொண்டு பதிலடி கொடுக்கிறது. ஒரு ஜனநாயகத்தில் இது ஏற்றுக்கொள்ள முடியாதது.
ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, திமுக நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. இன்று, நீட் தேர்வுக்கு எதிரான தமிழகத்தின் குரல், தேசிய தலைநகரம் உட்பட நாடு முழுவதும் எதிரொலிக்கிறது.
I strongly condemn the high-handedness of the police against CJP youth who were peacefully participating in a rally over the NEET discrepancies.
— Udhay (@Udhaystalin) July 20, 2026
The visuals from Delhi are shocking.
Instead of addressing their concerns, the government is responding with its police force. This…
தேசத்தின் இளைஞர்களின் கோரிக்கை தெளிவாக உள்ளது. அவர்களுக்குச் செவிசாயுங்கள்" என தெரிவித்துள்ளார்.