ஸ்டாலினுக்கு பின் உதயநிதி தான் முதல்வர் - அமித்ஷாவுக்கு அமைச்சர் பதிலடி
ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி தான் முதல்வர் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
அடுத்த முதல்வர்
புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கடந்த காலத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கட்டம் சரியில்லை.
அதனால் அவர் முதலமைச்சரே ஆக முடியாது என்றெல்லாம் கூறினார்கள். அதை தவிடு படியாகி முதலமைச்சரானவர் திமுக தலைவர் மு க ஸ்டாலின். அதேபோல் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து நிச்சயமாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக இன்றைய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருவார்.
அதில் எந்தவிதமான சந்தேகமும் எள்ளளவு கூட கிடையாது. திமுக என்ற வேரை அசைத்து கூட பார்க்க முடியாது. அதன் வேர் எங்கே இருக்கின்றது என்பது அமித்ஷாவுக்கு தெரியாது. திமுகவின் வேர் அவ்வளவு தூரம் ஆழமாக பாய்ந்து இருக்கின்ற வேர்.
திமுகவின் வேரை அமித்சாவல் தேடி கண்டுபிடிக்கவே முடியாது. பாஜக ஆளுகின்ற மாநிலத்தில் இருக்கக்கூடிய முதலமைச்சர்கள் மீது என்ன நடந்தது? அமித்ஷா குஜராத்தின் உள்துறை அமைச்சராக இருக்கும் பொழுது என்ன நடந்தது எல்லாவற்றையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அமைச்சர் திட்டவட்டம்
நீதிமன்றம் தீர்ப்பு இறுதியான தீர்ப்பு நாங்கள் நீதிமன்றத்தை நம்புகிறவர்களே தவிர இவர்கள் கொண்டுவரும் கருப்பு சட்டத்தை நம்புகிறவர்கள் இல்லை. நிச்சயமாக அந்த சட்டம் நிறைவேறுவதற்கான வாய்ப்பு கிடையாது. தப்பி தவறி நிறைவேறும் நாளும் நீதிமன்றத்தில் பல விஷயங்களை வைத்து அந்த சட்டத்தை எங்களால் முறியடித்து காண்பிக்க எங்களின் வழக்கறிஞர்களால் முடியும்.
இன்னும் அந்த சட்டம் நிறைவேற்றப்படவில்லை அது குழுவுக்கு தான் சென்றுள்ளது. சட்டம் வந்த பிறகு அதைப்பற்றி பேசுவோம். அத்தைக்கு முதலில் மீசை முளைக்கட்டும். ஒருவேளை அவர்களே இந்த திட்டத்தை கைவிடலாம்.
அச்சத்தை ஏற்படுத்துவதற்காக இந்த சட்டத்தை கொண்டு வருகிறோம் என்று கூறி இருக்கலாம். அவர்கள் யாரை பயன்படுத்துகிறார்கள் என்று பார்த்தால் தான் தெரியும். நாங்கள் ஆட்சியில் இருக்கின்றோம். எங்களின் கனவு மக்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான். அந்தக் கனவுகள் சுக்குநூறாக போகாது நிறைவேறும்.
எங்களுக்கு தேர்தலை பற்றி பயம் கிடையாது. நாங்கள் மக்களை சந்தித்து ஆட்சிக்கு வர வேண்டும் என்று எண்ணுகின்றோம். அவர்கள் குறுக்கு வழியில் ஆட்சியில் இருப்பவர்களை ஏதேனும் ஒரு வழியில் போய் காரணம் சொல்லி வழக்குகளில் சிக்க வைத்து அதன் மூலம் அவர்கள் பதவியைப் பறித்து ஆட்சிக்கு வர முடியுமா என்று அவர்கள் தான் பகல் கனவு காண்கிறார்கள்.
நாங்கள் பகல் கனவு காணவில்லை இரவு கனவும் காணவில்லை. காண வேண்டிய அவசியமும் எங்களுக்கு கிடையாது. எங்களுடைய தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டங்களை முன்வைத்து மக்களை சந்திப்பார். 39 சதவீதம் வாக்குகளை பெற்று அதிமுக பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று அமைச்சராக கூறியிருக்கிறார்.
தமிழ்நாட்டின் நிலவரம் அமித்ஷாவுக்கு தெரியாது. அகில இந்திய நிலவரம் வேறு தமிழ்நாட்டின் நிலவரம் வேறு என்பது 2026 தேர்தல் மீண்டும் அமித்ஷாவுக்கு பாடம் புகட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.