ஆளுநரை எதிர்த்து ஏன் கேள்வி கேட்கக்கூடாது?...கொந்தளித்த உதயநிதி
நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் இல்லத்தில் முன்பு அமர்ந்து போராட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிமுகவிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
உதயநிதி நிறைவுரை
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக சார்பில் நடத்தப்பட்ட உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு, மா.சுப்ரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிறைவுரையாற்றினார். அவர் பேசும் போது, நீட் தேர்வால் இதுவரை 21 உயிர்களை இழந்துள்ளோம் என குறிப்பிட்டு, இதற்கு மத்திய அரசும், அதிமுகவும் தான் காரணம் தான் என தெரிவித்தார்.
பதவியை பற்றி கவலையில்லை
நீட் தேர்வால் உயிரிழந்தவர்களின் அண்ணனாக பங்கேற்றுள்ளேன் என கூறி, ஆளுநருக்கு யார் நீட் அவ்வாறு பேசுவதற்கு உரிமை அளித்தது என கட்டமாக கேள்வி எழுப்பினார். வெறும் தபால்காரரான ஆளுநர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தேர்தலை சந்திக்க தயாரா என சவால் விடுத்த உதயநிதி, அமைச்சர் பதவியை பற்றி கவலைப்படாமல் நீட் எதிர்ப்பு உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக மக்களை குறித்து ஆளுநருக்கு தெரியாது என எச்சரித்த அவர், அவரை எதிர்த்து ஏன் கேள்வி கேட்கக்கூடாது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மாணவர்கள் இன்னும் சிறுது காலம் பொறுத்திருக்கவேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், முதல்வர் நிச்சயமாக நீட் தேர்வில் இருந்து விலக்கு வாங்கி தருவார் என உறுதிபட தெரிவித்தார்.
அதிமுகவிற்கு அழைப்பு
மேலும், நடைபெற்று வரும் அதிமுக மாநாட்டில் நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுமா? என சவால் விடுத்த உதயநிதி, அதிமுகவினருடன் சேர்ந்து பிரதமர் வீட்டின் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தவும் அழைப்பு விடுத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், வரும் நாடாளுமன்ற தேர்வில் பாஜக தோற்கடிக்கப்பட்டு காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்தால் நிச்சயமாக தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்து , நீட் ரத்து விவகாரத்தில் இது வெறும் ஆரம்பம் தான் என்றும் கூறினார்.