ஆளுநரை எதிர்த்து அதிமுகவால் மூச்சு கூட விட முடியாது - உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்
நீட் தேர்வு விவகாரத்தில், அதிமுகவால் பாஜகவை எதிர்த்தோ, ஆளுநரை எதிர்த்தோ மூச்சு கூட விட முடியுமா என உதயநிதி ஸ்டாலின் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக உண்ணாவிரத போராட்டம்
நீட் தேர்வில் மத்திய பாஜக அரசை எதிர்த்தும் ஆளுநரை எதிர்த்தும் வரும் 20-ஆம் தேதி தமிழக அனைத்து மாவட்ட தலைநகரங்களில் திமுக இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி சார்பில் கண்டன உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நாளில் அதிமுகவின் மாநில மாநாடு நடைபெறுகிறது என்பதால், இந்த அறிவிப்பிற்கு அதிமுக சார்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. இது குறித்து செய்தியாளர்கள் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சனம் செய்தார்.
உதயநிதி பதிலடி
இந்நிலையில் இது குறித்து தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்தித்த போது பதிலடி கொடுத்துள்ளார். ஜெயக்குமார் என்ன வேண்டுமானாலும் சொல்வார் என குறிப்பிட்டு, அவர் கையில பூ வச்சிருக்காரு அவரு சுத்தட்டும் என கடுமையாக விமர்சனம் செய்தார்.
திமுக நீட் தேர்விற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து தான் வருகிறது என கூறிய உதயநிதி, கூட்டணியில் இருக்கும் கட்சியான பாஜகவின் பிரதிநிதியான ஆளுநர், பெற்றோர் ஒருவரிடமே நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என கூறியதை சுட்டிக்காட்டி, அதற்கு அதிமுக இதுவரை ஒரு கண்டனமாவது தெரிவித்ததா? என கேள்வி எழுப்பினார். மேலும், ஆளுநரை எதிர்த்தோ, பாஜகவை எதிர்த்தோ மூச்சு விட கூட துணிச்சல் இல்லாதவர்கள் தான் அதிமுகவினர் என்றும் கடுமையாக சாடினார் உதயநிதி ஸ்டாலின்.