இனி வாட்ஸ்அப் மூலம் ஆட்டோ, டாக்ஸி சேவை பெறலாம் - எப்படி தெரியுமா?
உபெர் இந்தியா நிறுவனம் வாட்ஸ்அப் மூலம் உபெர் ரைடு முன்பதிவு செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
பொதுவாக ஆட்டோ, டாக்ஸி போன்ற வாகனங்களில் பயணம் செய்ய அதன் சேவையை ஓலா, உபெர், ரேபிடோ உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் மூலம் நாம் பெற்று வருகிறோம். இதற்கென தனி செயலிகளும் பயன்பாட்டில் உள்ளன.
இதனிடையே உபெர் இந்தியா நிறுவனம் வாட்ஸ்அப் சாட்பாட் கொண்டு உபெர் ரைடு முன்பதிவு செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் உபெர் செயலியை இன்ஸ்டால் செய்யாதவர்களும் உபெர் ரைடுகளை முன்பதிவு செய்யலாம்.
உபெர் செயலியில் மேற்கொள்ளப்படும் பயனாளர் பதிவு, ரைடு முன்பதிவு, பயணத்திற்கான ரசீது உள்ளிட்டவைகளை வாட்ஸ்அப் சாட்பாட் மூலமாகவே பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக டெல்லியில் பயன்பாட்டுக்கு வரவுள்ள இந்த புதிய திட்டம் விரைவில் அனைத்து நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் தற்போது ஆங்கில மொழியில் மட்டுமே வழங்கப்படும் இந்த சேவை பல்வேறு மொழிகளிலும் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.