தனுஷ் பட நடிகை வீட்டில் நகை, பணம் திருட்டு - குற்றவாளி யார் தெரியுமா?
பாலிவுட் நடிகை சோனம் கபூர் வீட்டில் நகை மற்றும் பணம் திருடுபோன சம்பவத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாலிவுட்டில் பிரபல கதாநாயகியாக வலம் வரும் சோனம் கபூர் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான அம்பிகாபதி படத்தில் நடித்து பிரபலமடைந்தார். இவர் டெல்லியில் உள்ள அம்ரிதா மார்க்கில் இருக்கும் வீட்டில் தனது கணவர் ஆனந்த் அஹுஜாவுடன் வசித்து வருகிறார். தற்போது சோனம் கபூர் கர்ப்பமாக இருக்கும் நிலையில் இவரின் வீட்டில் இருந்த ரூ. 1.41 கோடி மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
சோனம் கபூர் மாமியார் கடந்த பிப்ரவரி மாதம் தனது வீட்டில் உள்ள பீரோவில் இருந்த தங்க நகைகள் மற்றும் பணத்தை கணக்கிட்டுப் பார்த்த நிலையில் தான் திருட்டு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 23 ஆம் தேதி போலீசில் புகார் செய்யப்பட்டது. சோனம் கபூர் வீட்டில் வேலை செய்யும் 25 வீட்டு வேலைக்காரர்கள், 8 டிரைவர்கள், தோட்ட பராமரிப்பாளர்கள் ஆகியோரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
திருட்டு நடந்த வீட்டில் இருந்து மோப்ப நாய்களின் துணையோடு ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு ரகசியமாக விசாரணை தொடர்ந்தது. இந்நிலையில் அவர்களின் வீட்டில் பணிபுரிந்து வரும் செவிலியரான அபர்ணா ரூத் வில்சன் என்பவரின் நடவடிக்கையில் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில், அபர்ணா ரூத் வில்சனும், அவரது கணவர் நரேஷ் குமாரும் இணைந்து இந்தக் கொள்ளையை அரங்கேற்றியது தெரியவந்தது.
இருவரையும் போலீசார் கைது செய்த நிலையில் கொள்ளையடிக்கப்பட்ட நகை, பணத்தை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.