பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்- தவெக

Thamizhaga Vetri Kazhagam
By Yashini May 12, 2026 11:26 AM GMT
Report

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் யாரேனும் நடந்துகொண்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தவெக சார்பில் அறிக்கை விடப்பட்டுள்ளது. 

வெளியிட்ட அறிக்கை..,

கழகத் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.  

தமிழ்நாட்டு மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தொடங்கப்பட்டதுதான் தமிழக வெற்றிக் கழகம். தமிழ்நாட்டு மக்களின் ஏகோபித்த நம்பிக்கையைப் பெற்ற, தமிழ்ச் சொந்தங்களின் குடும்பத்தில் ஒருவராக இருக்கக்கூடிய வெற்றித் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மிகப் பெரிய பொறுப்பை நமக்குக் கொடுத்திருக்கிறார் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். அதை நோக்கியே நாம் பயணிக்க வேண்டும்.

எனவே கழகத் தோழர்கள் யாரும் பிறந்தநாள் விழா மற்றும் குடும்ப விழாக்கள் தொடர்பாகப் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளிலோ, மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களிலோ அல்லது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலோ எங்கும் பேனர்கள், பதாகைகள் உள்ளிட்டவற்றைக் கண்டிப்பாக வைக்கக் கூடாது.

பொதுமக்களுக்கு இடையூறாக எவ்விதக் கொண்டாட்டங்களிலும் யாரும் கண்டிப்பாக ஈடுபடக் கூடாது.

பேனர்கள், கொண்டாட்டங்கள் உள்ளிட்ட எவற்றின் வாயிலாகவும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் யாரேனும் நடந்துகொண்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.