மெர்சல் பிரச்சனை: விஜய்- எடப்பாடி சந்திப்பு- இரவோடு இரவாக தீர்வு: அமைச்சர் சொன்ன தகவல்
மெர்சல் படம் வெளியாவதில் சிக்கல் எழுந்த போது, நடிகர் விஜய் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தீர்வு கண்டார் என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியின் விளாத்திகுளத்தில் தவெகவில் இருந்து விலகி 500க்கும் மேற்பட்டவர்கள் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
அப்போது பேசிய கடம்பூர் ராஜு, "விலங்குகள் துன்புறுத்தப்படவில்லை என்ற சான்றிதழ் இருந்தால் மட்டுமே மெர்சல் படம் வெளியாகும் என்ற சூழல் இருந்தது.
இதற்காக நடிகர் விஜய் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வந்தார்.
சுமார் 3 மணிநேரம் அமர்ந்து பேசினர், அதுவும் ஞாயிற்றுக்கிழமை வந்தார், விஜய் கேட்கிறார் என்பதற்காக எடப்பாடி பழனிசாமி அவருக்கு உதவினார்.

உடனடியாக டெல்லியில் அதிகாரிகளிடம் பேசி பிரச்சனைக்கு முடிவு கட்டினார், இதனால் திட்டமிட்டபடி மெர்சல் படம் வெளியானது.
நாங்கள் அனைவருக்கும் பொதுவானர்கள், விஜய்க்கு உதவ வேண்டியது எங்களது கடமை.
அப்போது, இதற்காக வாழ்நாள் முழுக்க நன்றிகடனாக இருப்பேன் என கூறினார் விஜய்.
இப்போது விஜய் அதிமுகபெயரை உச்சரிக்கவே பயப்படுகிறார் என்று கூறியபடி, புகைப்படம் ஒன்றையும் காட்டினார்.
மேலும், விஜய் ஆரம்பித்துள்ளது வெற்று கழகம் தான், விஜய் அரசியலை விட்டுவிட்டு மீண்டும் நடிக்க வந்தால் அவரது படம் வெளிவர எந்த பிரச்னையும் இல்லாமல் பார்த்துக் கொள்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.