இன்றுடன் தேர்தல் பரப்புரை நிறைவு : தவெக விஜய் மக்களுக்கு எழுதிய கடிதம்!
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாக தேர்தலை சந்திக்க உள்ளது.
சட்டமன்றத் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் தமிழகத்தில் முடிவடையும் நிலையில், வாக்கு கேட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மக்களுக்கான கடிதமொன்றை எழுதியுள்ளார்.

குறித்த கடிதத்தில் விஜய் குறிப்பிடுகையில், "ஆசையோடும் அன்போடும் எனக்காக எல்லாவற்றையும் அள்ளி அள்ளித் தந்த உங்களோடு உங்கள் விஜய் மனம்விட்டுப் பேசவே இக்கடிதம்.
எனக்கு எல்லாமும் தந்த என் சொந்தங்களான தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்தவே அரசியலுக்கு வந்த நாள்முதல் சொல்லொணா நெருக்கடிகளையும் நிர்பந்தங்களையும் சொல்லவியலா வேதனைகளையும் இதுவரை நமக்கு விளைவித்தே வந்தவர்கள் வேறு யார்?
நமது அரசியல் எதிரியான மக்கள் விரோத தீயசக்தி திமுகவும் கொள்கை எதிரியான மற்றும் பலருடன் களம் காணும் பிளவுவாத சக்தியான பாஜகவும் என்று மக்களே அறிவர். மக்களுக்காக அவர்தம் நலன்களுக்காக மட்டுமே அரசியலுக்கு வந்த இந்த விஜய், பாசிச மனநிலை கொண்ட ஜனவிரோதக் கட்சிகளின் அழுத்தங்களுக்கா அடிபணிவான்?
திசைதிருப்பல் முதலீட்டுக் கழகங்களின் நெருக்கடிகளுக்கும் நிர்பந்தங்களுக்கும் குனிந்து கூழைக் கும்பிடா போடுவான்?. ஆதாயங்களைக் காட்டி உங்கள் மகனை அடக்கிவிடவும் முடியாது.

அதிகாரங்களை ஏவி உங்கள் சகோதரனை மிரட்டி விடவும் இயலாது. இறைவன் அருளால் இயற்கையின் துணையுடன் மாபெரும் பெண்கள் சக்தி, மாபெரும் இளைஞர் சக்தி, மாபெரும் மக்கள் சக்தியுடன் உலகெங்கும் உள்ள நமது தோழர்களின் பேராதரவுடன் முதன்மை அரசியல் சக்தியாகக் களத்திற்கு வந்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தமிழக மக்கள் நலன் சார்ந்த நோக்கத்தையும் அதன் தாக்கத்தையும் எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது என்பதை வரும் தேர்தலில் நம் மக்களே அவர்களுக்கு சரியான பாடம் புகட்டி உணர்த்துவர்.
நம்மை எள்ளி நகையாடியக் கூட்டம் மட்டுமன்று, இந்த நாடே அறியும்,அளக்கமுடியாத ஆழ்கடல் - விலக்க முடியாத விரிவானம் த.வெ.க என்று.நேர்மையின் நெருப்புக்கோளம் - மக்களின் நெஞ்சில் நீக்கமறக் குடியிருப்பது த.வெ.க என்று. சமூகநீதிக் காவலரண் - ஜனநாயகப் பேரரண் த.வெ.க என்று. இப்படிப்பட்ட த.வெ.கவை ஊழல் விஷ சக்திகளாலா வீழ்த்த முடியும்?
பாசிச சக்திகளாலா பகைவெல்ல முடியும்?. மக்களே… மீண்டும் சொல்கிறேன். இத்தனை நெருக்கடிகளையும் இத்தனை நிர்பந்தங்களையும் இத்தனை வேதனைகளையும் உங்கள் விஜய் தாங்கிக்கொண்டு நிற்க ஒரே ஒரு காரணம்தான் உண்டு.

அது உங்களின் உயர்தனி உள்ளன்பு மட்டும்தான். எந்த அரசியல் கட்சி முன்புலமோ பின்புலமோ இன்றி அரசியலுக்கு வந்த என்னை ‘நீ வாப்பா’… ‘நீ வா தம்பி’… ‘நீ வாண்ணா’… ‘நீ வா நண்பா’… ‘நீ வா தோழா’… ‘நாங்க பாத்துக்கறோம்’… என்ற உங்களின் பேரன்பும் பேராதரவும் மட்டுமே என்னை இயக்கும் மாபெரும் உந்துசக்தி என்பதே உண்மை. இப்போதும் சொல்வேன். எப்போதும் சொல்வேன்.
உங்களையும் என்னையும் இந்த உலகத்தில் எந்த அதிகார சக்தியாலும் எந்த அராஜக சக்தியாலும் எந்த தீயசக்தியாலும் எந்த பாசிச சக்தியாலும் எந்த ‘மற்றும் பலர்’ சக்தியாலும் பிரிக்கவே இயலாது.
அப்படிப் பிரிக்க நினைக்கும் அனைத்து சக்திகளையும் மக்கள் அக்குவேறு ஆணிவேறாகத் தனித்தனியாகப் பிரித்து, தூக்கி வீசி எறியப் போவது உறுதி.
பணத்தை மட்டுமே நம்பி தத்தம் சுயலாபங்களுக்காக அரசியல் களமாடும், எதிர்வரும் நம் தலைமுறையின் கனவுகளை அடகு வைக்கத் துடிக்கும் அடிமை அரசியல் சூதாடிகளின் வேறு எந்தச் சின்னத்திற்கு நீங்கள் வாக்களித்தாலும், பிளவுவாத சக்திகளுக்கான மறைமுக அல்லது நேரடி ஆதரவாக மட்டுமே அது மாறும்." என கடிதம் மூலம் தவெகவுக்கு வாக்கு கேட்டுள்ளார்.
68 வயதில் 7-ம் வகுப்பு தேர்வு எழுதிய நடிகர்... யார் இந்த தேசிய விருது பெற்ற நடிகர்னு தெரியுமா? Manithan