துாத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் - 3 வட்டாட்சியர்கள் சஸ்பெண்ட்
துாத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு உத்தரவிட்ட வட்டாட்சியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு
துாத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர். போராட்டமானது 100 நாட்களை கடந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்திய போது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது பொதுமக்கள் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் பற்றி உரிய விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து விசாரணை நடத்திய ஆணையம் தமிழக முதலமைச்சரிடம் விரிவான அறிக்கையை தாக்கல் செய்தது. கடந்த 17 ஆம் தேதி நடத்த சட்டமன்ற கூட்டத்தொடரில் இது தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
காவல்துறையினர்,வருவாய்துறையினர் சஸ்பெண்ட்
அந்த அறிக்கையில் பொதுமக்களை நோக்கி வேண்டுமென்றே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக அனைத்து அதிகாரிகள் மீதும் பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் துாத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை காவல் நிலையத்தில் அப்போது ஆய்வாளராக பணியாற்றி வந்த திருமலை உள்ளிட்ட 4 காவலர்களை டிஜிபி உத்தரவின் படி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில்,
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு உத்தரவிட்ட வட்டாட்சியர்கள் சந்திரன், சேகர், கண்ணன் ஆகிய 3 பேர் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.