துருக்கி, சிரியா நிலநடுக்கம் - உயிரிழப்பு 7 ஆயிரத்தை தாண்டியது
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
பயங்கர நிலநடுக்கம்
துருக்கில் உள்ள காசியான்டெப் நகரத்தில் அதிகாலை 4.17 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. காசியாடெப் அருகே 17.9 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது.
காசியாடெப் என்ற நகரம் துருக்கின் தென் கிழக்கிலும், சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியாவில் உள்ள கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின.
இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களில் துருக்கியின் ஹரமனமராஸ் மாகாணம் எல்பிஸ்டன் மாவட்டத்தில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவானது.

இதை தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பயங்கர நிலநடுக்கத்தால் துருக்கி - சிரியா நாட்டில் பல்வேறு நகரங்களில் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின.
உயிரிழப்பு 7 ஆயிரத்தை கடந்தது
இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர்.பலர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில், துருக்கி - சிரியா நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்துள்ளது.
தற்போது வெளியான தகவலின் படி நிலநடுக்கத்தால் துருக்கியில் 5 ஆயிரத்து 894 பேர் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் ஆயிரத்து 832 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் துருக்கி - சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 726 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கத்தால் 42 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.