புரட்சி இல்ல..துரோக தமிழர்'ன்னு வெச்சிக்கோங்க....டிடிவி தினகரன் விமர்சனம்
எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சி தமிழர் என பட்டம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை டிடிவி தினகரன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
டிடிவி விமர்சனம்
அதிமுக மாநாட்டில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சி தமிழர் என்ற பட்டம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது பேசியவர், “மதுரையில் நடைபெற்றது எழுச்சி மாநாடு இல்லை. அது பழனிச்சாமி கம்பெனிகளுக்கான வீழ்ச்சி மாநாடு என விமர்சனம் செய்தார். முன்னாள் அமைச்சர்கள் 15 லட்சம் பேர், 20 லட்சம் பேர் அழைத்து வருகிறோம் என்று கூறிய நிலையில், பணம் செலவு செய்தும் ஒரு வாகனத்திற்கு 5 பேர் மட்டுமே வந்ததாக அங்கு உள்ளவர்கள் தன்னிடம் கூறி வருத்தப்பட்டார்கள் என்றும் தனது விமர்சனத்தை டிடிவி தினகரன் முன்வைத்தார்.
துரோக தமிழர்
தொடர்ந்து பேசிய அவர், புரட்சி என்கிற வார்த்தைக்கு மரியாதை இல்லாமல் போய்விடும் என சாடி, துரோக தமிழர் என்றும், துரோகத்திற்கு எடுத்துக்காட்டான தமிழர் என்று அவருக்கு பட்டம் கொடுக்கலாம் என கடுமையான விமர்சனத்தை முன் வைத்தார்.
எடப்பாடி பழனிசாமி என்ன புரட்சி செய்து விட்டார் என்று வினவிய டிடிவி தினகரன், காலில் விழுந்து பதவி பெற்றுக்கொண்டது, பதவியில் நீடிக்க காரணமாக இருந்த பன்னீர்செல்வம் போன்றவர்களுக்கு துரோகம் செய்தது என்பது கட்சியை கபளீகரம் செய்தது தான் எடப்பாடி செய்த சாதனை என்று அவருக்கு பட்டம் கொடுத்தால் அது வெட்கக்கேடான செயல் என தெரிவித்தார்.