பணம் மற்றும் பதவி தான் அதிமுகவின் நிலைப்பாடு...டிடிவி தினகரன் விமர்சனம்..!
தற்போதைய அதிமுகவின் நிலைப்பாடு பணம் மற்றும் பதவி மட்டுமே என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
டிடிவி தினகரன் செய்தியாளர் சந்திப்பு
இன்று செய்தியாளர்களை சந்தித்த அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “தமிழ்நாடு அரசு சமீபத்தில் 3 பெண்களை அர்ச்சகர்களாக நியமித்தது வரவேற்கத்தக்கது என பாராட்டுகளை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், அதிமுகவின் நிலைப்பாடு பணம் மற்றும் பதவி மட்டுமே என விமர்சித்து, சனாதனம், சமூக நீதி பற்றியெல்லாம் அதிமுகவினருக்கு தெரியாது என சாடினார்.
அதிமுகவின் தற்போதைய பலம் இரட்டை இலை என கூறி, அதை மக்கள் மன்றம் மூலம் மீட்போம் என்றும் கோடநாடு வழக்கில் உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.
இபிஎஸ் கூட்டணியில் இருக்க வேண்டுமா..?
எடப்பாடி பழனிச்சாமி இருக்கும் கூட்டணியில் தங்கள் கட்சி இருக்க வேண்டுமா என அமமுகவின் நிர்வாகிகளும், தொண்டர்களும் யோசிப்பதாக செய்தியாளர்களிடம் கூறிய டிடிவி தினகரன், அவர்களின் கருத்துக்கு மதிப்பளித்து விரைவில் முடிவு செய்வோம் என தெரிவித்தார்.
தாங்கள் ஏற்கனவே தனியாக தேர்தலை சந்தித்தவர்கள் என சுட்டிக்காட்டிய அவர், இப்போதும் சந்திக்க தயக்கம் இல்லை என்றும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக டிசம்பரில் இறுதி முடிவு செய்வோம் என உறுதியளித்தார்.