இரட்டை இலை சின்னம் விவகாரம் : 21-ந் தேதி விசாரணைக்காக மீண்டும் ஆஜராகிறார் டிடிவி தினகரன்
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படும் வழக்கில் ஏப்ரல் 21-ந் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராகிறார் டிடிவி தினகரன்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது தேர்தல் ஆணையம் முடக்கிய இரட்டை இலை சின்னத்தை பெற அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி போலீசார் டிடிவி.தினகரன், சுகேஷ் சந்திரசேகர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இது தொடர்பாக தினகரன் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். வழக்கு விசாரணை டெல்லி திஸ்ஹசாரி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படும் வழக்கில் டி.டி.வி.தினகரனுக்கு அமலாக்கத்துறை கடந்த 6-ந் தேதி சம்மன் அனுப்பி 8-ந் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.
இதற்கு கால அவகாசம் கோரியிருந்த டிடிவி.தினகரன் கடந்த 12-ம் தேதி டெல்லியில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜர் ஆனார். இந்த விசாரணையில் சுகேஷ் சந்திரசேகரும் இடம்பெற்றிருந்தார்.
இந்நிலையில் மீண்டும் விசாரணைக்காக வருகிற 21-ந் தேதி டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக உள்ளார்.
ஏற்கனவே கடந்த 12-ந் தேதி ஆஜரான டிடிவி.தினகரனிடம் 11 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைப்பெற்றது குறிப்பிடத்தக்கது.