பாமகவினர் மீது பதியப்பட்டுள்ள வழக்கை உடனடியாக திரும்பப் பெறுக - டிடிவி தினகரன்!
பாமகவினர் மீது பதியப்பட்டுள்ள வழக்கை திரும்பப் பெறவேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
டிடிவி தினகரன்
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றாண்டுகளில் மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டண உயர்வைக் கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே அறவழியில் போராட்டம் நடத்திய,
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் திரு.அன்புமணி ராமதாஸ் அவர்கள் உட்பட அக்கட்சியினர் பலர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் நாள்தோறும் அரங்கேறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை களையவோ,
வலியுறுத்தல்
பள்ளி, கல்லூரி மாணவர்களின் எதிர்காலத்தை சிதைக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு, ஜனநாயக முறையில் போராட்டம் நடத்திய பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் திரு.அன்புமணி ராமதாஸ் அவர்கள் உட்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் மருத்துவர் திரு.அன்புமணி ராமதாஸ் உட்பட அக்கட்சியினர் பலர் மீது பதியப்பட்டுள்ள வழக்கை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.