CSKவில் எத்தனை தமிழ்நாடு வீரர்கள்? முதல்வரை அதற்கு போராட சொல்லுங்கள் - டிடிவி தினகரன்
நாங்கள் டெல்லிக்கு வந்தாலே முதலமைச்சர் பயப்படுகிறார் என டிடிவி தினகரன் பேசியுள்ளார்.
டிடிவி தினகரன் - அமித்ஷா சந்திப்பு
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு அதிமுக கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கீடு இறுதிசெய்யப்படவில்லை.

இதனைத்தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து வந்தார்.
இதனை தொடர்ந்து கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசினார்.
டெல்லி சென்றாலே பயப்படும் முதல்வர்
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், " அமித்ஷாவிடம் தொகுதி பங்கீடு குறித்து பேசவில்லை. ஒற்றுமையுடன் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், திமுகவை வீழ்த்துவதற்கான யூகங்கள் குறித்துமே பேசினேன்.

நாங்கள் டெல்லிக்கு வந்தாலே முதலமைச்சர் பயப்படுகிறார். பணியிட மாற்றம், பணி நியமனம் தொடர்பாக ரூ.2,500 கோடி ஊழலை அமலாக்கத் துறை கண்டுபிடித்திருக்கிறது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அதனால், சென்னை உயர் நீதிமன்றமே நடவடிக்கை எடுக்க சொல்லி தமிழ்நாட்டு அரசின் தலையில் குட்டியிருக்கிறது. தவறு செய்தால் டெல்லியைக் கண்டு பயப்பட தான் செய்வார்கள்.
தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கட்சிக்கு அதிமுக தான் தலைமை தாங்கும் என்பது அனைவரும் அறிந்ததே.
சிஎஸ்கேவிற்குத் தலைமை தாங்குவது தோனி. அதில் எத்தனை பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள்? இதற்கு சென்று முதலமைச்சர் போராடச் சொல்லுங்கள். இன்னும் டெல்லி தமிழ்நாடு என பேசி மக்களை ஏமாற்ற முடியாது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவெக இல்லை என்பதை எடப்பாடி பழனிசாமியும், நயினார் நாகேந்திரனும் மறுத்துவிட்டார்கள். சசிகலாவையும் சேர்க்கவில்லை. எங்கள் கூட்டணி உறுதியாகிவிட்டது" என பேசியுள்ளார்.