தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கு : டிடிவி தினகரன் நேரில் ஆஜர்
டெல்லியில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கின் விசாரணைக்கு டிடிவி தினகரன் ஆஜராகியுள்ளார்.
இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில் டிடிவி தினகரனுக்கு சம்மன் அனுப்பட்டிருந்த நிலையில் அவர் தற்போது டெல்லியில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர் ஆகியுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது தேர்தல் ஆணையம் முடக்கிய இரட்டை இலை சின்னத்தை பெற அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி போலீசார் டிடிவி.தினகரன், சுகேஷ் சந்திரசேகர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இது தொடர்பாக தினகரன் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். வழக்கு விசாரணை டெல்லி திஸ்ஹசாரி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படும் வழக்கில் டி.டி.வி.தினகரனுக்கு அமலாக்கத்துறை கடந்த 6-ந் தேதி சம்மன் அனுப்பி 8-ந் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.
இதற்கு கால அவகாசம் கோரியிருந்த டிடிவி.தினகரன் தற்போது விசாரணைக்காக டெல்லி அமலக்கதுறையில் நேரில் ஆஜராகியுள்ளார்.
இந்த விசாரணையில் சுகேஷ் சந்திரசேகரும் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.