திருப்பதி தேவஸ்தான காலண்டர்கள் அமேசானில் அதிக விலைக்கு விற்பனை - உச்சக்கட்ட குழப்பம்
அமேசானில் திருமலை திருப்பதி தேவஸ்தான காலண்டர்கள், டைரிகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவது பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஒவ்வொரு ஆண்டும் அச்சிட்டு வெளியிடும் காலண்டர்கள், டைரிகள் ஆகியவற்றிற்கு பக்தர்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கில் காலண்டர், டைரிகள் ஆகியவற்றை பக்தர்கள் போட்டிப்போட்டு வாங்கிச் செல்கின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வரை தேவஸ்தானத்தின் காலண்டர்கள், டைரிகள் ஆகியவற்றை அதிக விலை கொடுத்து கள்ள சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ள சம்பவமும் இதில் அடங்கும். இந்த நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் காலண்டர்கள், டைரிகள் ஆகியவற்றை ஆன்லைனில் விற்பனை செய்வதற்காக இந்த ஆண்டு இ-காமர்ஸ் நிறுவனமான அமேசானுடன் திருப்பதி தேவஸ்தானம் ஒப்பந்தம் செய்துகொண்டது.
ஆனால் அமேசான் நிறுவனம் பெருமாள் மற்றும் பத்மாவதி தாயார் புகைப்படத்துடன் கூடிய 15 ரூபாய் காலண்டரை ரூ.299 என்று குறிப்பிட்டு அதில் ரூ.150 தள்ளுபடி கொடுத்து பக்தர்களுக்கு ரூ.149க்கு விற்பனை செய்கிறது.
மேலும் ரூ.130 மதிப்புள்ள உள்ள டைரி ஒன்றின் விலையை ரூ.799 என்று குறிப்பிட்டு அதில் ரூ.300 தள்ளுபடி செய்து ரூ.499க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை கவனித்த பக்தர்கள் ஷாப்பிங் இணையதளத்தில் டைரிகள் மற்றும் நாட்காட்டிகளை அதிக விலைக்கு விற்க தேவஸ்தானம் அனுமதி வழங்கியது தவறானது. இந்த சட்டவிரோத வணிகத்தை முடிவுக்கு கொண்டு வந்து அமேசனுடனான தேவஸ்தானத்தின் ஒப்பந்தத்தில் முறைகேடுகளை களைய வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.