பாஜகவில் இருந்து விலகிய எம்எல்ஏ - என்ன காரணம் தெரியுமா?
திரிபுரா மாநிலத்தின் பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் கட்சியிலிருந்து விலகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திரிபுரா மாநிலத்தின் சூர்மா தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் பாஜகவை சேர்ந்த ஆஷிஷ் தாஸ் என்பவர் முதலமைச்சர் பிப்லாப் தேப் குறித்து தொடர்ச்சியாக விமர்சனங்களை வைத்து வந்தார். இதன் ஒரு பகுதியாக ஒரு வாரத்துக்கு முன்பு அவர் மேற்கு வங்கத்துக்கு வந்த கொல்கத்தாவில் உள்ள காளிகாட் காளி கோயிலுக்கு சென்ற ஆஷிஷ் தாஸ் தனது தலைக்கு மொட்டையடித்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பாஜவில் இருந்து விலகுவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறினார்.மேலும் பல எம்எல்ஏக்களும் வருங்காலத்தில் பாஜகவில் இருந்து விலகுவார்கள் என்று அவர் தெரிவித்தார்.
2023 ஆம் ஆண்டு பாஜக அரசு அகற்றப்படும்வரை மொட்டை தலையுடனே இருக்கப் போவதாக ஆஷிஷ் தாஸ் குறிப்பிட்டார். இதனிடையே அவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணையக் கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.