அனைத்துக் கட்சி கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வெளிநடப்பு -எதிர்க்கட்சிகள் ஆதரவு

Ysr Congress DMK Delhi
By Vinoja Jul 19, 2026 04:20 PM GMT
Report

டெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்த நிலையில், அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் வெளிநடப்பு செய்து எதிர்ப்பை தெரிவித்தன.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ளது.இதையொட்டி, கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்க மத்திய அரசு சார்பில் டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

அனைத்துக் கட்சி கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வெளிநடப்பு -எதிர்க்கட்சிகள் ஆதரவு | Trinamool Congress Support Opposition Walkout

நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜே.பி. நட்டா, மத்திய இணையமைச்சர் எல். முருகன், காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ், திமுக எம்.பி.க்கள் டி.ஆர். பாலு, திருச்சி சிவா உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு 

கூட்டம் தொடங்கியதும், திரிணாமுல் காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்படும் 20 எம்.பி.க்களுக்கு "இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சி" என்ற பெயரில் அழைப்பு விடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் வெளிநடப்பு செய்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தன.

அனைத்துக் கட்சி கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வெளிநடப்பு -எதிர்க்கட்சிகள் ஆதரவு | Trinamool Congress Support Opposition Walkout

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, அந்த 20 எம்.பி.க்களுக்கு சபாநாயகர் இன்னும் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் வழங்காத நிலையில், அவர்களை அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு எப்படி அழைத்தார்கள் என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கிடையில், மழைக்கால கூட்டத்தொடரில் நீட் வினாத்தாள் கசிவு, அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

மேலும், வந்தே மாதரம் பாடலை அவமதிப்போருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கும் மசோதா உள்ளிட்ட ஐந்து முக்கிய மசோதாக்களையும் மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளது.

இதனால், இந்த முறை நாடாளுமன்ற கூட்டத்தொடர் காரசாரமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநடப்புக்குப் பிறகு, சிறிது நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீண்டும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.