சர்வதேச வீராங்கனைகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய திருச்சி வீராங்கனை யார் தெரியுமா?
பஞ்சாப் மாநிலத்தில் நடந்த தடகள போட்டியில் திருச்சி வீராங்கனை தனலட்சுமி தங்கம் வென்றார். பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் கடந்த 15ம் தேதி தொடங்கி 19ம் தேதி வரை தேசிய தடகளப்போட்டிகள் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் தமிழ்நாட்டு அணியில் திருச்சியில் இருந்து மட்டும் 20 பேர் பங்கேற்றுள்ளனர்.
இந்த தேசிய தடகளப் போட்டியில் திருச்சியைச் சேர்ந்த வீரர், வீராங்கனை சாதனை புரிந்துள்ளனர். அதன்படி, பெண்கள் பிரிவில் திருச்சியைச் சேர்ந்த தனலட்சுமி 100 மீ ஓட்டத்தில் தங்கம் வென்றுள்ளார். இவர், 100 மீ தூரத்தை 11.39 வினாடிகளில் கடந்துள்ளார். குறிப்பாக, சர்வதேச வீராங்கனை டூட்டி சந்த், ஹீமா தாஸ் ஆகியோரை பின்னுக்கு தள்ளி திருச்சி வீராங்கனை தனலட்சுமி சாதனை படைத்துள்ளார். திருச்சி விமான நிலையம் அருகே குண்டூர் பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி, சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியில் படித்தவர்.
அப்போது பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போட்டிகளில் சாதனை புரிந்தவர். தற்போது தேசிய அளவிலான போட்டியில் தனி சாதனை படைத்து, சர்வதேச போட்டிகளில் பங்கெடுக்க தகுதி பெற்றுள்ளார்.
இதே போல் ஆண்கள் பிரிவில் 100 மீ ஓட்டத்தில், தஞ்சாவூரைச் சேர்ந்த திருச்சி ரயில்வே ரயில்வே ஊழியரான தடகள வீரர் இலக்கியதாசன் வெள்ளிப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார். இருவரையும் திருச்சி தடகள சங்கத்தினர், ரயில்வே ஊழியர்கள் பாராட்டியுள்ளனர்.