பிரபல இயக்குனருக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
முன்னணி தமிழ்த் திரைப்பட இயக்குனரான எஸ்.பி.ஜனநாதன், தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிப்பில், எஸ்.பி.ஜனநாதன் இயக்கி வரும் படம் 'லாபம்'. இந்தப் படத்தின் இறுதிக்கட்ட எடிட்டிங் பணிகள் நடைபெற்று வருகிறது.
நேற்று மதியம் எடிட்டிங் பணிகளை முடித்துக்கொண்டு வீட்டிற்குச் சென்றவர் மயக்கம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. உடனடியாக, கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜனநாதனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன், 'இயற்கை', 'ஈ', 'பேராண்மை', 'புறம்போக்கு என்கிற பொதுவுடமை' உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இவர் முதன்முதலில் இயக்கிய, 'இயற்கை' தேசிய விருதை வென்றது. இவருடைய படங்கள் சமூக அக்கறை கொண்டவையாக இருப்பவை என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன், விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்பதே அனைவரின் பிரார்த்தனையாக உள்ளது.