சென்னை ரயில் விபத்துக்கு காரணம் என்ன? - வெளியான அதிர்ச்சி தகவல்

By Nandhini Apr 26, 2022 08:38 AM GMT
Report

நேற்று முன்தினம் பேசின்பிரிட்ஜ் பணிமனையிலிருந்து கடற்கரை ரயில் நிலையத்தை நோக்கி ரயில் வந்தபோது திடீரென இந்த விபத்து நடைபெற்றது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயிலின் பிரேக் பிடிக்காமல் போனதால் தடம்புரண்ட மின்சார ரயில், ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடையில் உள்ள தண்டவாளத்தில் இருந்து நடைமேடை மீது ஏறியதாக ஆரம்பத்தில் கூறப்பட்டது. இதனால் முதல் பெட்டி பாதிக்கு மேல் நடைமேடை மீதி ஏறியதில் ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

அதே சமயம் ரயிலில் வேறு யாரும் இல்லாததால் உயிர் சேதவும் ஏற்படவில்லை. இதனையடுத்து காயமுற்ற ரயில் ஓட்டுநரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதன் பின்பு, செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே பாதுகாப்பு அதிகாரி, ரயில் ஓட்டுநர் பிரேக் பிடிக்காததே விபத்துக்கு காரணம். ஓட்டுநரின் கவனக்குறைவினால் பிரேக் பிடிக்காததால், ரெயில் நடைமேடையில் ஏறி சுவரில் மோதி நின்றுள்ளது என்று தெரிவித்தார்.

இந்த விபத்து தொடர்பாக ரயில் ஓட்டுநர் பவித்ரன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, இந்திய தண்டனை சட்டம் 279, ரயில்வே சட்டப்பிரிவு 151 மற்றும் 154 ஆகிய பிரிவுகளின் கீழ் ரயில் ஓட்டுனர் மீது எழும்பூர் காவல்துறையினர் வழக்கு பதியப்பட்டுள்ளது.

தற்போது, ஓட்டுநரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த விபத்திற்காக காரணம் வெளியாகி உள்ளது.

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் ஓட்டுநர் பிரேக் பிடிப்பதற்கு பதிலாக, ஆக்சிலேட்டரை அழுத்தியதே ரயில் விபத்துக்கு முக்கிய காரணம் என்று விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.