டான்ஸ் பிரச்சாரம் செய்த ட்ராபிக் போலீஸ் - விபத்தில் சிக்கிய வாகன ஓட்டி
கரூரில் சாலை நடுவே போக்குவரத்தை நிறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திய போக்குவரத்து போலீசாரால் மக்கள் அதிருப்தியடைந்தனர்.
கரூர் மாவட்டத்தில் நகர போக்குவரத்து காவல் நிலைய போலீசாரும், தனியார் தொண்டு நிறுவனமும் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியினை கரூர் பேருந்து நிலையம் அருகே இன்று நடத்தினர்.
பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையில் இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் சாலையை கடக்கும் பகுதியில் தரை விரிப்பை விரித்து, சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பாடல்களை ஒலிபரப்ப செய்து போக்குவரத்து காவலர்கள் உடையில் வந்த நடன கலைஞர்கள் பாடலுக்கு நடனமாடினர்.
கடுமையான வெயில் நேரத்தில் அந்த வழியாக வந்தவர்கள் வாகனங்களை நிறுத்தி அதன் நடுவே விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த ஏற்படுத்தினர். இதனால் அப்பகுதியில் 4 பக்கமும் வாகனங்கள் தேங்கி நின்று கொண்டிருந்தது. இதற்கிடையில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் இரண்டு சக்கரம் மற்றும் 4 சக்கர வாகனங்களின் முகப்பு விளக்குகளுக்கு நடுவில் கருப்பு கலர் ஸ்டிக்கர் ஒட்டினர்.
ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு சாக்லெட், பேனாக்களை பரிசுகளாக சாலையில் குறுக்கே சென்று வழங்கி வந்தனர். அப்போது, அவர்களை சாலையை கடக்க வேண்டும் என்பதற்காக திடீரென சாலையில் வந்த வாகனங்களை நிறுத்தினர்.
அப்போது முன்னாள் சென்ற இரு சக்கர வாகனம் நின்று விட, பின்னால் வந்த இரு சக்கர வாகனத்தில் வந்த 45 வயது மதிக்கதக்க நபர் இரு சக்கர வாகனத்தை கட்டுபடுத்த முடியாமல் முன்னாள் நின்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதி சாலையில் தலையில் படுகாயத்துடன் விழுந்து எழுந்தரிக்கவில்லை.
அங்கிருந்த போக்குவரத்து காவலர்கள் அவரை உடனடியாக மீட்டு, ஆட்டோ மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய போக்குவரத்து காவலர்களே விபத்துக்கு காரணமாகி விட்டதாகவும், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த விரும்பும் போலீசார் சாலையின் ஓரத்தில் நடத்தாமல் கடுமையான வெயில் நேரத்தில் பொதுமக்களை சிரமத்திற்கு உள்ளாக்கியதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.